Friday, December 5, 2014

நிதித் திட்டமிடலும் குடும்பமும் 2

முந்தைய கட்டுரையில் சொன்னபடி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் நிதிசார்ந்த முடிவுகளை நடைமுறைப்  படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். அதற்கு முதல் அடிப்படை நிதித் தரவுகள். அதாவது குடும்பத்தின் வரவு செலவு பற்றிய தகவல்கள். எடுத்துக்காட்டாக, வருமானம் என்றால் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள். சம்பளக்காரர்களுக்கு வருமானத் தகவல் வெளிப்படை. தொழில்முனைவோருக்கு அது அவ்வளவு தெளிவானதல்ல. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதனால் நிதி மேலாண்மை இரு வகையினருக்கும் ஒரே போன்றதல்ல. இந்தக் கட்டுரையில் மாதச் சம்பளக்காரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வருமானம்
பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஒரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது. அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டமிடலுக்கு இது தான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடலுக்கு ஊக்கத்தொகையைக் (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.

செலவு
இதில் தான் பலருக்கும் பிரச்சினை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கே தான். எங்கள் அனுபவத்தில், கணவன் மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவியானவள் குடும்பத்திற்கு வழங்கும் உழைப்பின் நிமித்தம் தன்னால் 'நன்கு கவனிக்கப்பட' வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது. இதில் கணவனுடைய 'பெருந்தன்மை' ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய 'பெருந்தன்மைக்கு' வேலையில்லை. 

செலவுகளை மூன்றாகப்  பிரிக்கலாம்.
  1. வாழ்வுச்செலவு
  2. தொழிற் செலவு
  3. விருப்பச் செலவு
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு. இதில் மருத்துவச் செலவு என்பது வழக்கமான, காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கான சிறு செலவுகளையே குறிப்பிடுகிறது. தொழில் செலவு என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கும் உண்டு. அதாவது, வேலை நிமித்தம் அவர்கள் செய்ய வேண்டியவை (நிறுவனத்தால் திரும்பக் கொடுக்கப்படாத செலவுகள்). இதில் போக்குவரத்து, சாப்பாடு, சக பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளும் செலவுகள் போன்றவை அடங்கும். மேற்கண்ட இரண்டும் அடிப்படைச்செலவுகள் எனலாம். மூன்றாவதான விருப்பச் செலவு (பொழுதுபோக்குச் செலவு, தனித்த விருப்பங்களுக்கான செலவு, தானம் போன்றவை) என்பது அடிப்படையானதல்ல. ஆனால் நிதிமேலாண்மையில் பெரும் பாதிப்பைச் செலுத்துவது அதுதான். ஏனென்றால், வாழ்வு மற்றும் தொழிற் செலவுகளில் பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை. ஆனால் விருப்பச் செலவுகள் ஒருவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செல்போனை (விலை ரூ.30000 என்று வைத்துக் கொள்வோம்) மாற்றும் ஒருவர் தான் மாதந்தோறும் ரூ.1250 செல்போனுக்காக செலவு செய்வதாக உணர்வதில்லை. அவரையே ஓய்வூதியத்திற்கென கூடுதலாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கச் சொன்னால் இல்லையென்பார். அதனால், ஒரு குடும்பம் தனது எதிர்காலத் திட்டங்களுக்கு  பணம் ஒதுக்கிய பின்பே விருப்பச் செலவுகளைச் செய்யவேண்டும். ஏனென்றால் விருப்பச் செலவுகளின் உடனடி நுகர்வின்பம் (அறுபது வயதில் கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியத்தை விட இன்றைய ஐபோன் 6 அதிகக் கவர்ச்சியானது) அளிக்கும் தூண்டுதல் அப்படி. அது மனித மனத்தின் பொதுவான பலவீனம். உண்மையில் ஒரு குடும்பத்தின் நிதித் திட்டமிடலுக்கான தேவை என்பது இந்த தனி மனித பலவீனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவே.

ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதை எப்படித் திட்டமிடுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment