Wednesday, December 21, 2011

நிதிப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது!

ன்லைனில் காப்பீடு அல்லது பரஸ்பர நிதி அல்லது வேறு நிதிச் சேவைகளை வாங்குவது ஒரு எளிதான காரியம். இணையத்தில் எப்பொழுதும் உலவிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக எளிது. ஏதேனும் கேள்வி எழுந்தால் உடனே கூகிள் செய்து விடலாம். ராக்கெட்டே செய்யலாம். இந்த வலைப்பதிவில் எழுதப்பட்ட முதல் பதிவே அது பற்றியது தான்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html

நேற்று எகனாமிக் டைம்ஸில் படித்த ஒரு செய்தி இது. ஆன்லைனில் பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்ய விரும்புவோர் ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ந்தால் மட்டுமே ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். மானிடரி ஆதாரிட்டி ஒப் சிங்கபூர் (Monetary Authority of Singapore) நடத்தும் ஆன்லைன் பாடங்களைப் படித்து, பதிலளித்து தேர்ந்தால் மட்டுமே அவர்கள் ஆன்லைனில் பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்வது உலகிலேயே இதுதான் முதல் முறை. தேறாதவர்கள் நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், 2008 வாக்கில் ஆயிரக்கணக்கான சிங்கபூரர்கள், குறைந்த அபாயமுள்ளது (low  risk) என்று நம்பப்பட்ட லெமான் பிரதர்ஸ் (Lehman Brothers) சிறு பத்திரங்களில் (Mini Bonds) முதலீடு செய்து பணத்தை இழந்ததே.


இதில் ஒரு விஷயம் என்னவென்றால், தெரியாமல் பணத்தை போட்டு இழப்பதைத் தவிர்த்தாலும், யாரிடம் நல்ல ஆலோசனையைப் பெறுவது என்பது குறித்த வரையறை செய்வது. இந்தியாவில் இதற்குத் தேவை அதிகம். நிதி ஆலோசகர் யார் என்ற வரையறையோடு தரப் படுத்துதலும் முக்கியம். தற்பொழுது உள்ள ஒரே தேர்வு சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவர்களே (Certified Financial Planners). மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளம் உதவும்.
http://www.fpsbindia.org/

Wednesday, November 23, 2011

காப்பீடு எடுக்கும்போது செய்ய வேண்டியவை

ரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.
 நமது தலைமை நிதித் திட்டமிடுபவர், அபூபக்கர் சித்திக் (CFP), இதைப்பற்றிக் கூறும்போது வாடிக்கையாளர்கள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

  1. காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIG யில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். 
  2. கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைதீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப் படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.
  3. காப்பீடு என்பது வாடிக்கையாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப் படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.
  4. காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.
  5. கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.   

Sunday, October 9, 2011

ஒரு அறிமுகம்

அபு பக்கர் சித்திக் 2008 ல் நிதித் திட்டமிடுதல் சான்றிதழ் (Certified Financial Planner) பெற்றார். அதற்கு முன்பே பண்டகச் சந்தையில் (Commodities Futures Market) நல்ல அனுபவம் உண்டு. பரஸ்பர நிதி (Mutual Fund) மற்றும் காப்பீடு (ஆயுள், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை) விசயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தமிழ்நாடு நிதித் திட்டமிடுபவர் கழகத்திலும் (Tamilnadu Financial Planner's Association - TNFPA http://www.tnfpa.com) முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நண்பர். அவரே எங்களது நிறுவனத்தின் (Accrue - http://www.accruetrade.com/) தலைமை நிதித் திட்டமிடுபவர் (Chief Financial Planner). 
சில மாதங்களுக்கு முன் நாணயம் விகடனில் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்போது (16.10௦.2011 இதழ்), மாதம் ரூ.14500 வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு இவர் தயாரித்த நிதித் திட்டம் நாணயம் விகடனில் வந்திருக்கிறது. பெரிய வருமானம் உள்ளவர்கள் மட்டுமே நிதித் திட்டமிட தகுதியுள்ளவர்கள் என்ற பொதுக் கருத்தை இது உடைக்கிறது. சிறு குடும்பமும் எதிர்காலத்தைத் தெளிவாகத் திட்டமிடலாம் என்பதற்கு நல்ல உதாரணம். பணவிவகாரத்திலும் இவரது கருத்துக்கள் வெளிவரும். கட்டுரையை இங்கே வாசிக்கலாம். http://www.vikatan.com 

இவரது வலைப்பதிவு http://nithivalam.wordpress.com/

Monday, September 26, 2011

முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டந்த வாரத்தில் உலகளவில் பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சி கண்டது. 2008 க்கு பின்னான பெரிய ஒரு வாரத்திய சரிவு. தங்கம் போன்ற பண்டங்களும் சரிந்துள்ளன. சமீபத் தகவல்படி தங்கம் இந்திய சந்தையில் பத்து கிராமுக்கு ரூ.700 அளவும் வெள்ளி கிலோவுக்கு ரூ.5000 அளவிலும் சரிந்துள்ளன. சில மாதங்களாகவே தங்கம் வாங்க பல முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கமே தீர்ந்து விடப் போவது போல. இப்போது வாங்க வில்லையென்றால் எதிர்காலத்தில் வாங்கவே முடியாதது போன்ற பதற்றம் பலரிடமும் காணப் பட்டது. பத்திருபது வருடங்களுக்கு மேலாக சந்தையில் முதலீடு செய்து வரும் எந்த ஒரு நீண்ட கால முதலீட்டாளரும் இதை ஒரு புன்னகையுடன் கடந்து விடுவார்கள். அவர்கள் இதைப் போன்ற காரண காரியமற்ற வாங்குதலைத் தாண்டியே வந்திருப்பார்கள். இது போன்ற நிலையற்ற சந்தையிலிருந்து விலகி நின்று கவனிக்கும் பக்குவத்தை அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கும்.

ங்களது நிறுவனத்தின் அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளரை வகைப் படுத்தினால் இப்படி வரும்.
1 . மாத வருமானக்காரர்கள் 
2 . பணக்காரர்கள் (High Networth Individuals)
3 . தொழில் முனைவோர் 
இவர்கள் பொதுவாக முதலீட்டை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1 . மாத வருமானக்காரர்கள் 
இவர்கள் தங்கள் வளத்தைச் சிறுகச் சிறுகக் கட்டுபவர்கள். நீண்டகாலக் குறிக்கோள் அடிப்படை கொண்டவர்கள். வருமானத்தின் ஒவ்வொரு பைசாவுக்கும் திட்டம் போடக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள். மூவரில் அபாயம் (Risk) குறைவானவர்கள். அறிவையும் உடல் உழைப்பையுமே கருவியாகக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியவர்கள். இவர்கள் இது போன்ற சந்தையைப் பார்த்துப் பதற்றப் படத் தேவையில்லை. அதே நேரம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். இவர்களின் வருமானத்தில் ஒரு பகுதி ஏற்கனவே சேம நல நிதிக்குப் (Provident  Fund) போய்கொண்டிருக்கும். கையில் வரும் பணம் முழுவதும் இவர்களது திட்டத்திற்குள் தான். செலவு போக (ஆயுள் மற்றும் பிற காப்பீடுகளின் செலவுகளையும் சேர்த்து) மீதமுள்ளவற்றை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்பதே கேள்வி. இளம் வயதுக்காரர்கள் (25 -40 வயது) சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) பணம் போடலாம். இது மறைமுகமாக சந்தையில் செய்யப்படும் முதலீடு. அதே நேரம் சந்தையின் எல்லா நிலையிலும் (உயர்வு/சரிவு) தொடர்ச்சியாக முதலீடு செய்வதால் அதிக அபாயமில்லாதது. சிறுகச் சிறுகச் சேர்த்து, சேர்ந்த பணத்தை மொத்தமாக பங்குச் சந்தையிலோ தங்கம், வெள்ளி போன்றவற்றிலோ போடுவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஒருவர் கடந்த இரு வருடங்களாக மாதம் ரூ.5000 சேமித்து, சேர்ந்த ரூ.1,20,000 யில் இப்போது தங்கம் ௦௦வாங்குவதை விட, அந்தந்த மாதத்திலேயே அந்தப் பணத்திற்குத் தங்கம் வாங்கியிருந்தால் அதிக பயன் அடைந்திருக்க முடியும். இல்லாவிட்டாலும் முதலீட்டின் மதிப்புக் குறைவையாவது தவிர்க்கலாம். சீரான முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையே இதுதான். சீரான முதலீட்டுத் திட்டம் பற்றித் தனியாகப் பார்க்கலாம். என்ன மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது என்பதை இவர்கள் ஒரு நிதித் திட்டமிடுபவரிடம் (Financial  Planner) ஆலோசனை செய்யலாம். அவர் தனிநபரின் நிதி நிலைக்கேற்ற திட்டங்களை பரிந்துரைப்பார்.

2 . பணக்காரர்கள் (உயர் நிகரமதிப்பு நபர்கள் - High Networth Individuals)
நிதி அடிப்படையில் இவர்களை இப்படி வரையறுக்கலாம். நிகர சொத்து மதிப்பு (வாழும் வீட்டைத் தவிர்த்த மதிப்பு) ஒரு மில்லியன் டாலரும் (தோராயமாக ரூ. 5 கோடி) அதற்கு மேலும் உள்ளவர்கள். ஏற்கனவே இருக்கும் சொத்துக்களிலிருந்து வரும் சம்பாத்தியத்தை வைத்து புதிய முதலீடுகளைச் செய்து மேலும் சொத்துக்களை சேர்ப்பவர்கள். இவர்கள் கொஞ்சம் பணத்தை கையிருப்பாக எப்போதும் வைத்திருப்பார்கள்.வாய்ப்பு வரும் போது முதலீடு செய்யத் தயாராக. அப்படி வைத்திருக்கும் பணத்திற்கு (Liquid Cash) பெரிதாக வரும்படி (Returns) ஏதும் இருக்காது. வங்கியில் குறைந்த வட்டி சேமிப்புக் கணக்கிலேயே பெரும்பாலும் கிடக்கும். அல்லது இரும்புப் பெட்டியில். அதனால் அதை சீக்கிரம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய சொத்தில் முதலீடு செய்யப் பார்ப்பார்கள். அது தங்கம் போன்ற பண்டத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ அல்லது நிலத்திலோ (Real Estate) அல்லது ஒரு தொழிலிலோ செய்யப்படும். இதில் பண்டங்களில் முதலீடு செய்வது இரு வகையில் நடக்கலாம். முதலாவது, நேரடியாக தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வது. இரண்டாவது, பண்டகச் சந்தையில் (Commodity Futures Market) முன் தொகையைக் (Margin) கட்டி வர்த்தகம் செய்வது. இதில் சிறிது பணம் இருந்தாலே போதும். ஆனால் அபாயம் இரண்டிலுமே ஒன்றுதான். இழப்பு கிட்டத்தட்ட ஒரே அளவுதான் இருக்கும். இங்கே முதலீட்டாளர் தெரிந்தே அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது. இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பண வலிமை இருப்பதாலேயே இதைச் செய்கிறார். இதுவே மற்ற இரு வகை முதலீட்டாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துகிறது. பங்குச் சந்தையில் இவர்கள் மூன்று வழிகளில் முதலீடு செய்கிறார்கள். தங்களது கணக்கில் (Demat Account) தாங்களே நேரடியாகப் பங்குகளை வாங்கிப் போடுவது. இதற்கு நேரமும் பங்குகள் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. இரண்டாவது , பங்குத் தொகுப்பு மேலாளர் (Portfolio Manager) ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது. அதாவது, இவர் சார்பாக இவருடைய கணக்கில் பங்குகளை வாங்கி விற்கும் அதிகாரத்தை நன்கு விஷயம் தெரிந்தவரிடம் கொடுப்பது. பங்குத்தரகு நிறுவனங்கள் இந்த சேவையைத் தருகின்றன. மூன்றாவது, பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்வது. இதில் குறைந்த அபாயம் உள்ள திட்டங்களிலிருந்து (Debt Funds - கடன் பத்திர முதலீடுகள்), அது அதிகமுள்ள திட்டங்கள் (Equity Funds - பங்கு முதலீடுகள்) வரை தேர்வுகள் உள்ளன.

3 . தொழில் முனைவோர் (Entrepreneur)
இவர்கள் ஒரு வகையில் மாத வருமானக்காரர்கள் போலத்தான். இவர்களுடைய நேரடியான அறிவார்ந்த உழைப்பினாலேயே இவர்கள் தங்கள் தொழிலையும் பணத்தையும் வளர்க்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள். அதே நேரம் மற்ற இருவரையும் விட அதிக நிதி அபாய (Financial Risk) நிலையில் இருப்பவர்கள். எப்பொழுதும் தொழில் முதலீடு தேவைப்படும் நிலையில் இருப்பதனால் எதிர்காலத்துக்காக முதலீடு செய்வதை தள்ளிப்போடக் கூடாது. ஏனென்றால் தங்களுடைய எதிர்காலத்துக்கு தேவையானவற்றைச் செய்யும் பொறுப்பு முழுதும் அவர்களையே சார்ந்தது. அதே நேரம் அதிக லாப நோக்கில், குறுகிய காலத்தில் சம்பாதிக்க இவர்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முனையக் கூடாது. அதில் லாப நட்டத்துக்கு உத்தரவாதம் கிடையாது. நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே அவர்கள் அதில் ஈடுபடவேண்டும். அதுவே அவர்கள் தொழிலுக்கும் நல்லது. தங்களது சராசரி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் சீரான முதலீடு செய்வது சிறந்தது. பங்குச் சந்தையிலோ பண்டகச் சந்தையிலோ நேரடியான கவனத்தை செலுத்துவது குறைவாக இருக்க வேண்டும். அதாவது பண ரீதியாகவும் கால ரீதியாகவும்  அவர்களது தொழிலைப் பாதிக்காத வகையில்.

இப்போது என்ன செய்யலாம்?
தங்கத்தைப் பற்றி விரிவாக, என்ன செய்யலாம் என்று ஏற்கனவே எழுதி விட்டோம். அதை இங்கே பார்க்கலாம்.
தங்கம் இப்போது வாங்கலாமா?
ங்குச் சந்தையைப் பொறுத்தவரை இப்போதுள்ள பிரச்சினை உலகளாவியது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மிகவும் பிரச்சினையில் இருக்கின்றன. அமெரிக்காவின் (US) கடன் திரும்ப செலுத்தும் தகுதியை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (S&P) AAA (அதி உச்ச நம்பகத்தன்மை) விலிருந்து AA +  என்று குறைத்தது தெரிந்திருக்கும்.
"தன்னுடைய எந்தக் கடனையும் அமெரிக்கவால் அடைக்க முடியும். ஏனென்றால் அதைச் செய்யத் தேவையான பணத்தை எப்போதும் எங்களால் அச்சடிக்க முடியும். அதனால் தவறுவதற்கான வாய்ப்பு பூஜ்ய அளவே. S & P விஷயம் செய்ததாக நான் நினைப்பது என்னவென்றால், ஏதோவொரு அடிப்படையான தவறு இருக்கிறதென்ற தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அமெரிக்காவின் ஆன்மாவான சுயமரியாதையில் அடித்ததே." 
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் சொன்ன வாக்கியங்கள் மூலமே பிரச்சினை அடிப்படையானது என்று தெரியும். அங்கே வேலையின்மை பெரும் பிரச்சினை. 
ஐரோப்பாவில் கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் வரிசையாக மூழ்கிக் (Insolvency) கொண்டிருக்கின்றன. பலரும் ஐரோப்பிய யூனியனின் சரிவு உலகப் பொருளாதாரத்தை பலமாகப் பாதிக்கும் என்றே கூறுகிறார்கள். இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக விரிவாகப் பேச வேண்டியவை.
இதில் இந்தியாவின் சந்தை என்னவாகும்? ஏற்கனவே உயரத்திலிருக்கும் பணவீக்கம், அதனால் அதிகரிக்கப்படும் வங்கி கடன் வட்டி விகிதம் போன்றவை சேமிப்பையும் முதலீட்டையும் பாதிக்கும். நுகர்வைக் குறைக்கும். அதனால் தொழில் வேகம் குறையும். அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் விலை உயர்வால் வாகனங்களின் விற்பனை குறைந்து விட்டது. வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு வீடு வாங்குவோரைப் பாதிக்கிறது. அதற்கும் மேலாக வளர்ச்சி வேகம் குறைகிறது என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஆக எல்லாம் குறைந்து, பண்டங்களின் விலை வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் குறையும் போது வட்டி விகிதம் குறைக்கப்படும். இது ஒரு சக்கரம். இறுதியாக, அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் ஒரு வீழ்ச்சி (Recession) க்குள் செல்லாமல் இருந்தால் (40 ௦% நிகழும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்), ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் (முக்கியமாக கிரீஸ் மற்றும் இத்தாலி முழுகுவதைத் தடுப்பது) தனது பிரச்சினையிலிருந்து நல்லபடியாக மீண்டால், ஆசியச் சந்தை மேலே வரும் வாய்ப்புள்ளது. 

க, இப்போதைக்குச் சந்தையில் புதிய முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கலாம்.
ஏற்கனவே உள்ள முதலீடுகளைச் சரி பார்க்கலாம். சற்று பாதுகாப்பான முறையில் அவற்றைத் திருத்தி அமைக்கலாம்.
மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து பொருளாதாரம் மீளும் போது, தொகுப்பை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்.    

Friday, September 23, 2011

நிதித் திட்டமிடுதல் ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?

மேற்கண்ட தலைப்பில் வந்த ஒரு எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) கட்டுரை வாடிக்கையாளர்களுடனான எங்களது அனுபவங்களைப் பெரிதும் ஒத்திருந்தது. அதில் குறிப்பிட்ட காரணங்கள் பற்றிய எங்களது கருத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு.

  • பொதுவாக முதல் சந்திப்பில் நிதித் திட்டமிடல் பற்றிப் பேசும் பொது மிக ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் தேவை என்பதிலும், சீக்கிரம் திட்டமிட ஆரம்பிப்பதில் உள்ள நன்மையையும் நன்கு உணர்கிறார்கள். அடுத்த கட்ட நகர்வு தான் பலருக்கும் பிரச்சினை. அதாவது செயல் படுத்துவதில் தான் சுணக்கமே. இது பெரும்பாலும் திட்டமிடுபவர் (Financial Planner) தேவைப்படும் தகவல்களைக் கேட்கும் போதே ஆரம்பிக்கிறது. பல இளைஞர்களுக்கு (25 - 35 வயதுக்காரர்கள்) பல தகவல்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பலருக்கு தங்கள் வங்கி கிளை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. மாத வருமானக்காரர்களுக்கே இது பொருந்தும். இவர்களுக்கு தங்களுடைய நிதித் தகவல்களை எடுத்துக் கொடுப்பது பெரிய காரியமாக இருக்கிறது. இந்த மனப்பாங்குக்குக் காரணமாக நான் நினைப்பது, அவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான தயக்கமே. தங்களுடைய உண்மையான நிதி நிலையை (அவர்கள் நல்ல நிதி நிலையில் இருந்தாலுமே) தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு பதற்றம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதைத் தள்ளிப் போடவே தகவல்களை அளிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். தாமதத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலும் பணிச்சுமையே. முதலீடுகள், காப்பீடுகள், வருமானம் பற்றிய தகவல், கடன் விவரங்கள் போன்றவற்றை தோண்டியெடுப்பது தேர்வெழுதும் உணர்வை கொடுக்கிறது போல. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வசதியும் நெருக்கடியற்ற நிலையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 
  • இளம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வை இப்போதே அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது. அதுவும் கடன் வாங்கி. சொத்துக்களை கட்டமைக்க வாங்குவதைக் காட்டிலும் பொருட்களை நுகர்வதற்கே (ஹோம் தியேட்டர், செல் போன்கள், கார்) அதிகம் கடன் வாங்கப் படுகிறது. நிதித் திட்டமிடல் தங்களுடைய வாழ்க்கைமுறை நுகர்வை (Lifestyle consumption) பாதிக்ககூடும் என்பதால் அதைத் தள்ளிப்போடவே விரும்புவார்கள். 'எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருக்கிறது', என்ற மனப்பாங்கே இதற்குக் காரணம். 
  • நிறைய வாசிப்பதினால் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு. நிறையப் படிப்பது தவறில்லை. உண்மையில் அவ்வாசிப்பு விழிப்புணர்வை கூட்டி நிபுணர்களின் வழிகாட்டுதல் பற்றிய மதிப்பீட்டை  ஏற்படுத்த வேண்டும். மாறாக, தாங்களாகவே இதைச் செய்து கொள்ள முடியும் என்ற அபிரிமிதமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையில் அப்படிச் சுயமாகத் திட்டமிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.    ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆழ்ந்த கல்விப் பின்புலமும் நீண்ட அனுபவமும் உடைய நிபுணர்களின் வழிகாட்டுதல் எப்போதும் பலமே. இதைச் சட்டை செய்யாதவர்கள் தங்களின் வாசிப்பின் வழியாக, தங்களைக் குறி வைத்து சந்தைப்படுத்தப் படும் பல நிதிப் பண்டங்களை (காப்பீடுகள், பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கி பின் குழப்பத்துக்கு ஆளாவதைக் காணலாம். எனக்குத் தெரிந்த, நன்கு வருமானம் ஈட்டுகிற, நிறைய முதலீடுகள் செய்துள்ள, ஒரு இளம் தொழிலதிபர் நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார். இவர் நிதி சார்ந்த பல பத்திரிக்கைகளை வாசிப்பவர்.
  • நிதி சார் குறிக்கோள் இல்லாமலிருப்பது. பெரும்பாலான இளம் பெற்றோர் தங்களது குழந்தைகள் மீதான கனவோடு அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு பத்து வருடங்கள் கழித்து அவர்களின் உயர் படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்றால் தெரியாது. தோராயமாக் கூட கணக்கிட மாட்டார்கள். அதைப் போலவே தங்களின் ஓய்வு கால நிதி பற்றியும் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்.இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் ஓய்வு பெரும் நிலையில் இருப்பவர்களும் கூட கவனம் இல்லாமல் இருப்பது இங்கே சாதாரணம். இது ஒரு நிதி சார்ந்த இலக்கு என்ற தெளிவு இல்லாததுதான் காரணம்.
  • கட்டணம் இன்னொரு காரணம். நிதித் திட்டமிடுதல் போன்ற விசயங்களுக்கு பெரிய முன் வரலாறு இங்கே இல்லை. ஆலோசனைக்கு கட்டணம் செலுத்துவது மருத்துவம் தவிர பிற துறைகளில் இன்னும் பிரபலமாகவில்லை. இதற்குப் போயா இவ்வளவு? அப்படியென்ன வேலையிருக்கிறது இதில்? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உண்மையில் ஒரு நிதித் திட்டத்தைத் தயாரிப்பதில் திட்டமிடுபவர் தனது பணி நேரத்தில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். நிதிக் கருவிகளைக் (Financial  Tools) கொண்டு, தனது கல்வி, அனுபவம் மற்றும் பொருளறிவு (Product Knowledge) ஆகியவற்றோடு ஒரு தனி நபரின் பிரத்யேகமான சூழலையும் கணக்கில் கொண்டே திட்டத்தை வரைகிறார். இதை ஒரு சூத்திரத்தில் அடக்க முடியாது. ஒவ்வொரு திட்டமும் தனித்தன்மை வாய்ந்தது. 
னால் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. கொஞ்சகொஞ்சமாக படித்தவர்களிடையே நிதித் திட்டமிடுதல் பற்றிய சிந்தனை கூடிவருகிறது. நிதிவிவகாரம் பற்றிய பத்திரிக்கைகளும் பெருகி வருகின்றன. தொழில் விவகாரங்களை அலசும் நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தனி நபர் நிதி (Personal Finance) பற்றிய பதிவுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதோடு தனி நபர் நிதி பற்றி மட்டுமே பேசும் இதழ்கள் வெளி வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மாறிவரும் சூழல் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. 

    Wednesday, August 24, 2011

    தங்கம் இப்போது வாங்கலாமா?

    2005 வாக்கில் நான் ஒரு பண்டக முன் ஒப்பந்தச் சந்தை (Commodities Futures Market) தரகு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பண்டகச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைக் கணிப்பதன் மூலம் வாடிக்கையாளருக்கு வர்த்தக லாபத்தை ஏற்படுத்த ஆலோசனை கூறுவதே ஒரு பகுத்தாய்வாளரின் (Analyst) பணி. ஆய்வு இரு வகைப்படும். முதலாவது ஒரு பண்டகத்தின் அடிப்படைக் காரணிகளை (உற்பத்தி மற்றும் நுகர்வுத் தேவை சம்பந்தமானது) ஆராய்வது. எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதோடு நுகர்வு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதைக் கணக்கிட்டு பார்ப்பதன் மூலம் அடையும் முடிவு. தேவை குறைந்து உற்பத்தி சீராக இருந்தால் விலை விழும். உற்பத்தி சீராக இருந்தும் தேவை கூடினால் விலை ஏறும். தங்கத்தை இதில் வகைப் படுத்த முடியாது. தங்கத்தின் நுகர்வு பெரும்பாலும் முதலீடு தொடர்புடையதாக இருப்பதும், பணத்துக்கு மாற்றாக இருப்பதும், அதை ஒரு தனித்துவமிக்க ஒன்றாக ஆக்குகிறது. இந்தியாவிலோ தங்கம் உணர்வோடு பிணைந்தது. இரண்டாவது, தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis). நிரல் படம் (Charts) மற்றும் முந்தைய தரவுகளைக் கொண்டு மென்பொருள் உதவியுடன் எதிர்கால விலைப் போக்கைக் (Price Trend) கணிப்பது. 

    அப்படி ஆராய்ந்து 1 அவுன்ஸ் (தோராயமாக 31 கிராம்) தங்கம், 500 டாலரைத் தாண்டும் என்று பலர் முன்கூறுதல் (Forecast) செய்தார்கள். ஜிம் ரோஜர்ஸ் (முதலீட்டாளர் மற்றும் Hot Commodities, Adventure Capitalist போன்ற புத்தகங்களை எழுதியவர்) போன்றவர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட பண்டகச் சந்தை ஏறுமுகத்தை கணித்து முன்கூறியிருந்தார்கள். அதேபோல பல பண்டங்களும் (தாமிரம், கச்சா எண்ணெய் மற்றும் கோதுமை, சோளம் போன்ற தானியங்கள்) விலை ஏறிக்கொண்டிருந்தன. முதன் முதலாக புதிய விலை உயர்வுகளைப் பார்த்தோம். நாள்தோறும். சுத்தமான காளையின் ஆதிக்கம். 

    2005 ல் தங்கம் ஒரு அவுன்ஸ் 500 டாலரைத் தாண்டியது. 2007 ல் 800 டாலரைத் தாண்டியது. 2008 ல் 1000 டாலர். 28 வருடங்களுக்கு முந்தைய உச்ச விலையான 850௦ டாலரை அப்போதுதான் தாண்டியது. 

    Year
    Yearly
    High 
    Yearly
    Low  

     Year
    Yearly
    High 
    Yearly
    Low 
    1972
    $70.00
    $44.00
    1990
    $423.75
    $345.85
    1973
    $126.00
    $64.00
    1991
    $403.00
    $344.30
    1974
    $195.00
    $117.00
    1992
    $359.60
    $330.20
    1975
    $185.00
    $135.00
    1993
    $406.70
    $326.10
    1976
    $142.00
    $102.00
    1994
    $397.50
    $369.65
    1977
    $168.00
    $127.00
    1995
    $396.95
    $372.40
    1978
    $243.65
    $165.70
    1996
    $416.25
    $367.40
    1979
    $524.00
    $216.55
    1997
    $367.80
    $283.00
    1980
    $850.00
    $474.00
    1998
    $314.60
    $273.40
    1981
    $599.25
    $391.25
    1999
    $323.50
    $252.80
    1982
    $488.50
    $296.75
    2000
    $325.50
    $264.10
    1983
    $511.50
    $374.25
    2001
    $291.45
    $256.65
    1984
    $406.85
    $303.25
    2002
    $342.75
    $277.75
    1985
    $340.90
    $284.25
    2003
    $417.25
    $319.90
    1986
    $442.75
    $326.00
    2004
    $454.20
    $375.00
    1987
    $502.75
    $390.00
    2005
    $536.50
    $411.10
    1988
    $485.30
    $389.05
    2006
    $725.00
    $524.75
    1989
    $417.15
    $358.50
    2007
    $841.10
    $608.40
    2008
    $1,011.25
    $712.50


    2009
    $1,212.50
    $810.00
    2010
    $1,421.00
    $1,058.00




    1978 வரை படிப்படியாக ஏறிக் கொண்டிருந்த தங்க விலை முதன்முறையாக 1979 ல் 500 டாலரைத் தாண்டியது. 1980 ல் 850 டாலரை தாண்டிய தங்கம் 2008 ல் தான் அதை மீண்டும் எட்டிப் பிடிக்கிறது. இடைப்பட்ட 27 வருடங்களின் உச்சபட்ச விலை சராசரி 442.12 டாலர்தான்.
    தங்கம் விலையேற தற்போதைய முக்கியக் காரணம் உலகப் பொருளாதாரம் பற்றிய பொதுவான அச்ச உணர்வே. அமெரிக்காவின் பொருளாதார சரிவு (Recession) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் (கிரீஸ், இத்தாலி போன்ற) பொருளாதாரப் பிரச்சினைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பி உள்ளன. இது போன்ற நிலையற்ற தன்மை நிலவும்போது பெரும் பணம் தொழில் முதலீடுகளில் (பங்குச் சந்தை) இருந்து எடுக்கப்பட்டு தங்கத்தில் போடப்படும். தங்கமே அவர்கள் முன் உள்ள ஒரே மாற்று. எச்சரிக்கையுணர்வே இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஆகும். சரியான திசை புலப்படும் வரை இது தொடரும். 

    இப்போது முதலீடு செய்யலாமா?
    இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவொரு முதலீட்டாளரும் தங்கத்தை பொதுவாக நகைகளாக வைத்திருப்பார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு பழக்கம் இல்லை. அதனால் அவர்களது மொத்த சொத்தில் தங்கத்தின் பங்கு கணிசமாக இருக்கும். சொத்தோ வேறு முதலீடுகளோ இல்லாத குடும்பத்தில் கூட நகைகளாக சிறிது தங்கம் இருக்கும். அதனால் மொத்தமாக முதலீடு (Bulk Investment) செய்பவர்களுக்கு இது சரியான நேரமல்ல. எந்த ஒரு பண்டமும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்காது. மொத்த முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மட்டும் சீரான இடைவெளியில் (மாதா மாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போல) தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். அதையும் நகைகளாக வாங்காமல் தங்க சந்தைப் பரிவர்த்தனை நிதியில் (Gold Exchange Traded Fund) முதலீடு செய்வது நல்லது.ஏனென்றால் அடுத்த பத்திருபது வருடங்களுக்கு தங்க முதலீடு என்ன விளைச்சலைக் கொடுக்கும் என்பதே கேள்வி. முந்தைய வரலாறு கண்முன்னே உள்ளது.

    Thursday, August 18, 2011

    நிதித் திட்டமிடுதல் (Financial Planning) - சில குறிப்புகள்

    நிதித் திட்டமிடுதல் (Financial Planning) பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தது தான். நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், எதிர்பார் வாடிக்கையாளருக்கும் (Prospects) இது உதவும். நிதித் திட்டமிடுதல் பற்றிய தகவல்களையும், சந்தேகங்களையும் களைய இக்கட்டுரை உதவக்கூடும். தற்போதைய நிலவரத்தைக் கணக்கில் கொண்டே இதை எழுதுகிறேன்.

    நிதித் திட்டமிடுதல் என்றால் என்ன?
    உங்கள் நிதியைச் சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் எதிர்கால குறிக்கோள்களை அடையும் முறைமையே நிதித் திட்டமிடுதல் என்பது. குறிக்கோள்கள் நிதி சம்பந்தப் பட்டவை மட்டுமே. பண ரீதியாக நீங்கள் எங்கே நிற்கிறீர்கள், எங்கே போக விரும்புகிறீர்கள் என்பதோடு அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.


    நிதித் திட்டத்தில் என்ன இருக்கும்?

    பாதுகாப்புத் திட்டம் (Protection Planning)
    வாடிக்கையாளரின் ஆயுள் மற்றும் அவரது சொத்துக்களின் இழப்பால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் திட்டம். நிதித் திட்டத்தில் முதலிடம் இருப்பதைப் பாதுகாப்பது தான். வாடிக்கையாளரின் ஆயுள் காப்பீடு போதுமானதா என்பது  கணிக்கப்படும். இதைப் பற்றிய எனது முந்தைய பதிவைப் பார்க்கவும்.
    http://panavivakaram.blogspot.com/2011_06_01_archive.html
    மேலும் மருத்துவக் காப்பீடு, வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருட்கள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, கடன் காப்பீடு போன்றவையும் திட்டமிடப்படும். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில் நிபுணர்களுக்கும், நிறுவனத்தின் இயக்குனர் போன்றவர்களுக்கும் பொறுப்புக் காப்பீடு (Liability Insurance) எடுப்பதும் முக்கியம். திட்டமிடுபவர் அனைத்தையும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கணக்கிடுவார்.


    முதலீட்டுத் திட்டம் (Investment Planning)
    வாடிக்கையாளரின் முந்தைய முதலீட்டைச் சரிபார்த்து, அது அவருடைய குறிக்கோள்களுக்கு இட்டுச் செல்லுமா என்பதின் அடிப்படையில் மாற்றங்களை செய்வதோடு புதிய முதலீடுகளையும் திட்டமிடுவது.

    வருமானவரி திட்டம் (Tax Planning)
    சரியான முதலீடுகள் வழியாக வருமான வரிச் சுமையைக் குறைப்பதற்கான திட்டம்.

    ஓய்வுத் திட்டம் (Retirement Planning)
    ஓய்வு பெற விரும்பும் வயதின் அடிப்படையில், மீதமுள்ள ஓய்வு காலத்துக்கான நிதியைக் கணக்கிட்டு, அதற்கான முதலீட்டைத் திட்டமிடுதல்.
    மகன் மற்றும் மகளுக்கான எதிர்கால குறிகோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

    குழந்தைகள் எதிர்காலத் திட்டம்
    குழந்தைகளுக்கான எதிர்காலக் குறிக்கோள்களை (மேற்படிப்பு, திருமணம் போன்றவை) திட்டமிடுதல். அதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் திட்டம்.

    உடைமைத் திட்டம் (Estate Planning)
    வாடிக்கையாளர்கள் தங்களது சொத்துக்களை யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று திட்டமிட்டு அதை சட்டப்பூர்வமாக பதிவு (உயில் போன்றவை) செய்வதே உடைமைத் திட்டமிடுதலாகும். இது மிகவும் முக்கியம். சரியாகச் செய்யப்படாவிட்டால் வாரிசுகளுக்கிடையில் பிரச்சினையில் பொய் முடியும். விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் இக்காலத்தில் சிறு சொத்துடையவர்களும் இதில் கவனம் செலுத்துவது நல்லது. இது ஒரு வழக்கறிஞரின் துணை கொண்டே செய்யப்படும்.

    பயன்கள்
    • நீங்கள் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகளுக்கு ஒரு திசையைக் காட்டவும் அர்த்தம் கொடுக்கவும் உதவுகிறது.
    • உங்களுடைய ஒவ்வொரு நிதி சார் முடிவுகளும் பிற பண விவகாரங்களை எப்படி பாதிக்கும் என்று அறிவது. (30 வயதில் நீங்கள் வாங்கும் கார் உங்களுடைய ஓய்வூதிய நிதியை எவ்வளவு குறைக்கும்?)
    • ஒவ்வொரு பண முடிவும் ஒரு முழுமையான சித்திரத்தின் ஒரு பகுதி என்று பார்க்க முடிவது.
    • வாழ்க்கை சூழலின் மாற்றத்திற்கு ஏற்ப நிதி விசயங்களை சரியாகக் கையாண்டு குறிக்கோள்களில் இருந்து மாறாமல் செல்வது. (புதிய வேலை, அதிக சம்பளம், புதிதாகத் தொழில் தொடங்குதல், சீக்கிரமே ஓய்வு கொள்ள விரும்புதல் போன்ற பல)
    நீங்களே செய்து கொள்ளலாமா?
    தாராளமாகச் செய்யலாம். நீங்களே புத்தகங்கள் வாங்கிப் படிக்கலாம். சில மென்பொருட்களின் துணை கொண்டு செய்யலாம். சில உயர் மதிப்பு தனிநபர்களை (High Netwoth Individuals - HNI) சந்திக்கையில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு இதையெல்லாம் தாங்களே செய்யக்கூடியவர்கள் என்று சொல்வார்கள். அப்படி செய்தும் இருப்பார்கள். அவர்களுடைய முதலீடுகளைப் பார்த்த பின்பு கொடுக்கும் விளக்கமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்களால் எல்லா நிதிச் சேவை பண்டங்களின் நுணுக்கங்களையும் ஆராயும் அளவுக்கு அதில் நிபுணத்துவமோ, ஆராய நேரமோ இருக்காது. அது அவர்கள் வேலையும் அல்ல. சிலர் தங்கள் நிதி பண விவகாரங்களை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டார்கள். தங்கள் மனைவியிடம் கூட. ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. தனக்கு ஒரு நிபுணரின் உதவி தேவையா என்று.

    நிதித் திட்டமிடுபவர் (Financial Planner) என்பவர் யார்?
    நிதித் திட்டமிடும் முறைமை வழியாக உங்கள் எதிர்காலக் குறிக்கோள்களை அடைய உதவுபவர். பெரிய சித்திரத்தைக் காண்பவர். ஒவ்வொரு சிறிய பண விவகாரமும் மொத்த நிதி நிலைமையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடத் தெரிந்தவர்.  மொத்தத்தில் தனிநபர் நிதி சார்ந்த முழுமையான பார்வையைக் கொண்டவர்.

    நிதித் திட்டமிடும் சேவையைத்தான் பெறுகிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
    தற்போதைய நிலவரப்படி, நிதித் திட்டமிடுதல் தர வாரியம் (FPSB - Financial Planning Standards Board of India) அளிக்கும் சான்றிதழ் பெற்ற நிதித் திட்டமிடுபவர்களையே (Certified Financial Planners) இந்த சேவையைக் கொடுக்கும் முழுமையான தகுதி கொண்டவர்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் இதைச் செய்ய இவர்கள் தான் தகுதியானவர்கள் என்று அரசாங்க வரையறை எதுவும் இல்லை. 
    சான்றிதழ் பெற்றவர்களை இந்த இணைய தளத்தில் காணலாம். http://www.fpsbindia.org/

    நிதித் திட்டமிடல் முறைமை (Financial Planning Process)

    1. வாடிக்கையாளர் - திட்டமிடுபவர் உறவை வரையறுத்தல். முதல் சந்திப்பில் வாடிக்கையாளர் தங்களது எதிர்பார்ப்பையும் திட்டமிடுபவரிடம் இருந்து அவருக்குக் கிடைக்கும் சேவைகளைப் பற்றியும் தெளிவாகப் பேசிக் கொள்வது. இது நீண்ட காலத் தொடர்பு என்பதால் பரஸ்பரப் புரிதலுக்கு ஒரு தொடக்கமாக அமையும்.

    2. வாடிக்கையாளர் தகவல் சேகரிப்பு. வாடிக்கையாளரின் நிதித் தகவல்களை (வருமானம், சொத்து, கடன், சேமிப்பு, முதலீடு, காப்பீடு) திட்டமிடுபர் தெரிந்து கொள்வது. மேலும் அவரது எதிர்கால குறிக்கோள்களையும் (குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணம், புதிய தொழில் தொடங்குதல்) திட்டவட்டமான கால அட்டவணையில் வரிசைப் படுத்துதல். தேவையான ஆவணங்களையும் பெற்றுக்கொள்வது.

    3. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் எங்கே நிற்கிறார் என்று தெரிந்துகொள்வது. சொத்துக்கள், கடன்கள், பணவரத்து முதலிய தகவல்கள் அடிப்படையில் வாடிக்கையாளரின் நிகர மதிப்பு (Net Worth) கணக்கிடப்படும். அவருடைய மாதாந்திர வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் நிகர பண வரத்து (Net Cash Flow) என்னவென்று தெரியவரும். எதிர்கால குறிக்கோள்களை சந்திக்க இது மிக முக்கியம். 

    4. மேற்கண்ட காரியங்களின் பின் ஒரு திட்டத்தை வகுப்பது. நிதித் திட்டமிடுபவர் தகவல்களை ஆராய்ந்து வாடிக்கையாளர் நிதி நிலையை தீர்மானித்து விட்டு, குறிக்கோள்களை எதிர்காலத்தில் அடையக் கூடிய சாத்தியமுள்ள திட்டங்களை வகுப்பார். அதை வாடிக்கையாளரோடு அமர்ந்து பேசி மேலும் சரி செய்து, ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன் வைப்பார். 

    5. திட்டத்தை செயல்படுத்துவது (Implementation). வரையப்  பட்ட திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது. எடுத்துக் காட்டாக, ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு, 17 வருடங்கள் கழித்து 25 லட்ச ருபாய் தேவை என்ற குறிக்கோள் வைத்திருக்கிறார். அதற்கு அவர் மாதம் எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும் என்றும் அது எவ்வளவு விளைச்சலைத் (Returns) தரும் சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் திட்டத்தில் இருக்கும். திட்டப்படி மாதம் ..... தொகையை அவர் சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) போட வேண்டும்.ஆனால் அவர் முன் நூற்றுக்கணக்கான தேர்வுகள் உள்ளன. இதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதே பெரிய வேலை. அதை வாடிக்கையாளரே செய்ய நிறைய பொறுமையும் நேரமும் ஆகும். அப்படியே இருந்தாலும் பொருளறிவு (Product Knowledge) இருக்கிறதா என்பது முக்கியம். அதனால் திட்டத்தைச் செயல் படுத்துவதிலும் திட்டமிடுபரின் பணியை கோருவது பொருத்தமாக இருக்கும்.

    6. மேற்பார்வை பார்ப்பது. திட்டம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருப்பது. வாடிக்கையாளரின் நிதி நிலையைப் போலவே. அதனால் போட்ட பாதையிலேயே போய்க் கொண்டிருக்க முடியாது. அதனால் வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசி வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மறு பரிசீலனை (Review) செய்ய வேண்டும். திட்டத்தின் போக்கை திட்டமிடுபவரும், தனது நிதி நிலையில் ஏற்படும் மாற்றத்தை (சம்பள உயர்வு, வேறு நிறுவனத்துக்கு மாறுதல், வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது போன்றவை) வாடிக்கையாளரும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது முக்கியம். மாறிக்கொண்டேயிருக்கும் நிதி நிலைக்கு ஏற்ப திட்டமும் மாறிக்கொண்டேயிருக்கும்.

    கட்டணம் எவ்வளவு?
    முக்கியமானது. திட்டமிடுபவருக்கு மட்டுமல்ல வாடிக்கையாளருக்கும்தான். இலவசமாக எந்த பணியையும் யாரும் செய்ய மாட்டார்கள். இதை உங்களுக்கு இலவசமாக யாரும் செய்தால் அவருக்கு இதனால் என்ன ஆதாயம் என்று கேளுங்கள்? பதிலை வைத்தே அவரின் நேர்மையை தெரிந்து கொள்ளலாம். உண்மையில் கட்டணத்திற்கு ஒரு வரையறை கிடயாது. வாடிக்கையாளரும் திட்டமிடுபவரும் பேசித்தான் ஒரு கட்டணத்திற்கு வர வேண்டும். வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் தேவையும், பணியும் மாறுவதால் பொதுவான கட்டணம் சாத்தியம் இல்லை. சந்தையில் எப்படி கட்டணம் இருக்கிறது என்று முன்பு ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
    ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
    http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html
    அதில் பார்க்கலாம். 
    நிதித் திட்டமிடுபவருக்கு இரு வழியில் வருமானம் வரலாம். ஒன்று, கட்டணமாக கோருவது. இரண்டாவது, திட்டத்தைச் செயல்படுத்தும் போது கிடைக்கும் முகவர் தரகு (Agency Commission). திட்டம் அளிக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர் அதைத் தன் மூலமாக செயல் படுத்துவதை உறுதிப்படுத்த முடியாது. செயல்படுத்துவார்களா என்பதையே உறுதிப் படுத்த முடியாது. அதனால் திட்டமிடுபவர் தான் செய்த பணிக்கான கட்டணத்தை கோரிப் பெறுவதே நடக்கிறது. முதல் சந்திப்பிலேயே அவர் குறைந்த பட்சம் எவ்வளவு என்றும் சொல்லிவிட வேண்டும். பொதுவாக இவ்வளவிலிருந்து அவ்வளவு வரைக்கும் என்று சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் முதல் சந்திப்பிலேயே   வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணியின் ஆழ அகலம் திட்டமிடுபவருக்குத் தெரியாது. அதே நேரம் வாடிக்கையாளருக்கோ கட்டணம் எவ்வளவு என்றே தெரியாமல் தனது முக்கியத் தகவல்களைப் பகிரவும் முடியாது. அதனால் திட்டமிடுபவர் தனது கட்டண வரம்பைத் தெரிவித்து விடலாம் (எடுத்துக்காட்டாக, ரூ.5000 லிருந்து  ரூ.25000 வரை என்று). அது சரியென்றால் வாடிக்கையாளர் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். இதுவே தற்போதைய நடைமுறை.