Tuesday, November 18, 2014

நிதித்திட்டமிடலும் குடும்பமும்

நெருங்கிய உறவினர் ஒருவர் தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டதைப் போல வேறு யாரையும் நான் கண்டதில்லை. அரசூழியரான அவர் தனது ஓய்வுக் காலம் வரையிலும் தனது மனைவியை எங்கேயும் தனியே அனுப்பியதில்லை. அவருக்கு கால் வலியும் இருந்தது. அதன் காரணமாக அவர் மனைவியைச் சிறு வேலையைக் கூட செய்யவிடமாட்டார். இவரின் பணிவிடையிலேயே அவர் பெரும்பாலும் இருந்தார். வீடு, டிவி வேறொன்றுமில்லை. நல்ல உடல்நலத்துடன் எப்பொதும் சுறுசுறுப்பகக் காணப்படும் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிகிச்சையெடுத்துக்கொண்ட ஒரே வருடத்தில் இறந்தார். இப்போது அவரது மனைவி தனது பெருமளவு வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிறார். தண்ணீர்க்குடம் தூக்கி வைப்பது முதற்கொண்டு பல வேலைகளையும் தானே செய்கிறார். தனது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் அவர் மீதமுள்ள காலத்தைத் தனியே கடக்க வேண்டும். ஆனால் குடும்பத்தின் நிதி சார்ந்த விசயங்கள் அனைத்தையும் தனது மனைவியிடம் பகிர்ந்ததனால் அவருக்கு இப்போது பணப்பிரச்சினை ஏதுமில்லை. இத்தனைக்கும் அவர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.

ங்களது அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளர்களிடம் இரண்டு விசயங்களை அவதானித்து வருகிறோம்.
1.   கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது.
2.   கணவன் மட்டும் வேலைக்குப் போகும் வீடுகளில் பெண்கள் குடும்ப நிதிச் சூழல் பற்றி ஒரு தோராயமான கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். இத்தனைக்கும் இவர்களில் பலர் நன்கு படித்தவர்கள் (எம்பிஏ க்களும் அடக்கம்).
மேலே சொன்ன அவதானிப்பில் குடும்ப நிதி மேலாண்மை என்று எதைச் சொல்கிறேன் என்பதை விளக்கினால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு குடும்பம் என்பது பொருளாதாரச் சமூகத்தில் ஒரு சிறிய நிதியமைப்பு. ஒரு அமைப்பின் நிதி நலனில் அதன் உறுப்பினர் அனைவருக்கும் சமமான அக்கறை இருக்க வேண்டும். அதாவது ஒரு தனி நபர் (அவர் சம்பாதிப்பவராகவே இருந்தாலும்) எடுக்கும் எந்த முடிவும் அமைப்பிலுள்ள பிறரையும் பாதிக்கும் என்பதே. அதனால் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் (பதின்ம வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை விட்டு விடலாம், மிஞ்சுவது கணவன் மனைவி இருவரும்) எவரொருவர் எடுக்கும் நிதிசார்ந்த முடிவகள் பற்றித் தெளிவாக அறிந்திருப்பதுடன், அந்த நிதிசார்ந்த முடிவுகள் அவர்களது எதிர்கால நிதி வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதைத் தெளிந்து இருப்பது மிகவும் அவசியம். ஆக, இருவரும் கலந்து பேசி எடுக்கும் நிதி முடிவுகளினால் ஏற்படும் எதிர்கால ஏற்ற இறக்கங்களை இருவரும் சேர்ந்தே சந்திப்பதே சிறந்த குடும்ப நிதி மேலாண்மை எனலாம். இங்கே நாம் அவர்கள் எடுக்கும் முடிவிகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேசவில்லை. அது வேறு விசயம். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய நிபுணத்துவம் பற்றியது.

மேலே சொன்னபடி, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் நிதி முடிவுகள் இருவரும் கலந்து பேசியே எடுக்கப் படுகின்றன (எங்களது அனுபவத்திலிருந்தே சொல்கிறோம்). இதற்குக் காரணமாக இவற்றைச் சொல்லலாம்.
·         திருமணத்திற்கு முன்பே இருவரும் வேலைக்குச் சென்று வருவதால் ஏற்படும் பணம் சம்பாதிப்பது பற்றிய புரிதல் (இது வீட்டில் இருக்கும் மனைவிக்குக் குறைவு)
·         சம்பாதிப்பது பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் (வீட்டுப் பெண்கள் ஒரு சிறு விசயத்துக்கூட கணவனைப் பணத்திற்காக எதிர்பார்ப்பது – கொடுக்க மாட்டார் என்பதில்லை, ஆனால் இது ஒரு விதமான (அவர்களுக்குச் சலிப்பூட்டகூடிய) சார்ந்திருக்கும் மனப்பாங்கையே தருகிறது)
·         வேலைச் சூழலில் இருந்து (சக பணியாளர்களின் அனுபவங்கள் மற்றும் நிதிப்பிரச்சினைகள் மூலமாக) ஒரு பெண் தெரிந்துகொள்வது. அதன் மூலமாக கணவனுக்கு இணையாக குடும்ப நிதி மேலாண்மையில் பங்களிப்பது. வீட்டுப் பெண்களுக்கு இது தங்களது குடும்ப நபர்களிடமிருந்தே கிடைக்கும்.

ரி. அப்படியென்றால் வீட்டிலிருக்கும் பெண்கள் அதைச் சிறப்பாகச் செய்யமுடியாதா? கண்டிப்பாக முடியும். அப்படியுள்ள குடும்பங்களும் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன. ஆனால் மொத்ததில் ஒன்றிரண்டே. அதற்குக் காரணமாக நாங்கள் பார்ப்பது கணவர்களின் இடைவிடாத ஊக்கமும் நச்சரிப்பும்தான். நீண்ட கால நோக்கில் பார்த்தால் இந்த கணவர்கள் குடும்ப நிதி மேலாண்மையை எளிதாக்குகிறார்கள். மனைவிக்கு நிதிசார்ந்த முடிவுகளை (எந்தச் சோப்பை வாங்குவது என்பது பற்றியல்ல) எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாக துணிச்சலையும் பங்களிக்கும் மனப்பாங்கையும் தருகிறார்கள். இது எதிர்காலத்திற்கு (மிக வேகமாக நகரமயமாகும், மனித உறவுகள் அந்நியமாகிக் கொண்டிருக்கிற இந்தியா) மிகவும் அவசியமாகும். இனி வரும் காலத்தில் பிள்ளைகளோடு வாழ்வது என்பது சாத்தியமல்ல. ஓய்வுக் காலத்தை கணவனும் மனைவியும் சேர்ந்துதான் ((உறவினர் மற்றும் பிள்ளைகளின் அண்மையின்றி) வாழ வேண்டிய சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

தற்கெல்லாம் மேலாக, ஒரு கணவன் தான் இல்லாத போது தனது மனைவி குடும்பத்தை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதை எண்ண வேண்டியிருக்கிறது. முக்கியமாக எல்லாவற்றையும் கடன் வாங்கி நுகரும் இந்தக் காலத்தில். பொதுவாக ஒற்றை முடிவு (கணவனே அனைத்து நிதி முடிவுகளையும் எடுப்பார்) அதிகாரம் கொண்ட குடும்பங்களில் அது ஏன் நடக்கிறது என்று எண்ணும்போது கீழ்க்கண்ட காரணங்கள் நினைவுக்கு வருகின்றன.
1.   வேலைக்குச் செல்லும் கணவன் தனது தந்தையைப் பிரதியெடுப்பது (இது 1970கள் இல்லை என்பதை உணராமல்).
2.   தானே அனைத்தையும் எல்லாக் காலத்திலும் பார்த்துக் கொள்ளமுடியும் என்ற தவறான புரிதல் (தனது நீடித்த உடல் நலம், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய போதிய புரிதலின்மையின் விளைவு).
3.   தான் சம்பாதித்த பணத்தைச் செலவிடுவதை யாருக்கும் (மனைவிக்கும் கூட) சொல்லதேவையில்லை என்ற மனப்பாங்கு. இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. தான் யாருக்கும் (உறவினர்கள், நண்பர்கள்) உதவி செய்வது மனைவிக்குப் பிடிக்காது என்பதால் மறைப்பதும் உண்டு.
4.   முன்னதுக்கு முற்றிலும் எதிரானது. குடும்பத்தைச் சமாளிக்க தான் வாங்கும் கடன் மனைவிக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம். பணப் பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியாதவன் என்ற பிம்பம் குடும்பத்தின் மீதான தனது அதிகாரத்தைச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் கூட இதற்கு ஒரு காரணம்.
5.   மனைவியின் ஆற்றலைக் குறைவாக எடைபோடுதல் (சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது தவிர வேறொன்றும் தெரியாது என்ற மனப்பாங்கு). பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரியான மனைவியையே கூட இப்படி வைத்திருப்பார்கள்.

ணவர்களையே இதற்கு முழுப் பொறுப்பாக்க முடியாது. கணவர் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகள் தன்னையும் குழந்தைகளையும் சேர்த்தே பாதிக்கும் என்று மனைவி உணரவேண்டும். அதனால், அதை அறிந்து கொள்வதிலும், அது பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்வதிலும் தனக்கு இருக்கும் உரிமையை (பொறுப்பை) வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதொன்றும் கணவனை அவமரியாதை செய்வதாகாது. எதையாவது செய்து தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும் என்று வசதியாக இருந்துகொள்வது மிகவும் தவறு. கார்ப்பரேட் வேலையானாலும் சரி, தொழில் முனைவோரானாலும் சரி நிச்சயமற்ற நிதிச் சூழலை எதிர்கொள்ள குடும்பத்தில் இருவருமே சமமாகப் பங்களிக்க வேண்டிய காலம் இது.



1 comment:

Anonymous said...

வெகு சிறப்பான விழிப்புணர்வு தரும் கட்டுரை. நன்றி.

Post a Comment