Friday, December 5, 2014

நிதித் திட்டமிடலும் குடும்பமும் 2

முந்தைய கட்டுரையில் சொன்னபடி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் நிதிசார்ந்த முடிவுகளை நடைமுறைப்  படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். அதற்கு முதல் அடிப்படை நிதித் தரவுகள். அதாவது குடும்பத்தின் வரவு செலவு பற்றிய தகவல்கள். எடுத்துக்காட்டாக, வருமானம் என்றால் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள். சம்பளக்காரர்களுக்கு வருமானத் தகவல் வெளிப்படை. தொழில்முனைவோருக்கு அது அவ்வளவு தெளிவானதல்ல. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதனால் நிதி மேலாண்மை இரு வகையினருக்கும் ஒரே போன்றதல்ல. இந்தக் கட்டுரையில் மாதச் சம்பளக்காரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வருமானம்
பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஒரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது. அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டமிடலுக்கு இது தான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடலுக்கு ஊக்கத்தொகையைக் (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.

செலவு
இதில் தான் பலருக்கும் பிரச்சினை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கே தான். எங்கள் அனுபவத்தில், கணவன் மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவியானவள் குடும்பத்திற்கு வழங்கும் உழைப்பின் நிமித்தம் தன்னால் 'நன்கு கவனிக்கப்பட' வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது. இதில் கணவனுடைய 'பெருந்தன்மை' ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய 'பெருந்தன்மைக்கு' வேலையில்லை. 

செலவுகளை மூன்றாகப்  பிரிக்கலாம்.
  1. வாழ்வுச்செலவு
  2. தொழிற் செலவு
  3. விருப்பச் செலவு
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு. இதில் மருத்துவச் செலவு என்பது வழக்கமான, காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கான சிறு செலவுகளையே குறிப்பிடுகிறது. தொழில் செலவு என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கும் உண்டு. அதாவது, வேலை நிமித்தம் அவர்கள் செய்ய வேண்டியவை (நிறுவனத்தால் திரும்பக் கொடுக்கப்படாத செலவுகள்). இதில் போக்குவரத்து, சாப்பாடு, சக பணியாளர்களோடு பகிர்ந்து கொள்ளும் செலவுகள் போன்றவை அடங்கும். மேற்கண்ட இரண்டும் அடிப்படைச்செலவுகள் எனலாம். மூன்றாவதான விருப்பச் செலவு (பொழுதுபோக்குச் செலவு, தனித்த விருப்பங்களுக்கான செலவு, தானம் போன்றவை) என்பது அடிப்படையானதல்ல. ஆனால் நிதிமேலாண்மையில் பெரும் பாதிப்பைச் செலுத்துவது அதுதான். ஏனென்றால், வாழ்வு மற்றும் தொழிற் செலவுகளில் பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை. ஆனால் விருப்பச் செலவுகள் ஒருவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செல்போனை (விலை ரூ.30000 என்று வைத்துக் கொள்வோம்) மாற்றும் ஒருவர் தான் மாதந்தோறும் ரூ.1250 செல்போனுக்காக செலவு செய்வதாக உணர்வதில்லை. அவரையே ஓய்வூதியத்திற்கென கூடுதலாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கச் சொன்னால் இல்லையென்பார். அதனால், ஒரு குடும்பம் தனது எதிர்காலத் திட்டங்களுக்கு  பணம் ஒதுக்கிய பின்பே விருப்பச் செலவுகளைச் செய்யவேண்டும். ஏனென்றால் விருப்பச் செலவுகளின் உடனடி நுகர்வின்பம் (அறுபது வயதில் கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியத்தை விட இன்றைய ஐபோன் 6 அதிகக் கவர்ச்சியானது) அளிக்கும் தூண்டுதல் அப்படி. அது மனித மனத்தின் பொதுவான பலவீனம். உண்மையில் ஒரு குடும்பத்தின் நிதித் திட்டமிடலுக்கான தேவை என்பது இந்த தனி மனித பலவீனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவே.

ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதை எப்படித் திட்டமிடுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Tuesday, November 18, 2014

நிதித்திட்டமிடலும் குடும்பமும்

நெருங்கிய உறவினர் ஒருவர் தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டதைப் போல வேறு யாரையும் நான் கண்டதில்லை. அரசூழியரான அவர் தனது ஓய்வுக் காலம் வரையிலும் தனது மனைவியை எங்கேயும் தனியே அனுப்பியதில்லை. அவருக்கு கால் வலியும் இருந்தது. அதன் காரணமாக அவர் மனைவியைச் சிறு வேலையைக் கூட செய்யவிடமாட்டார். இவரின் பணிவிடையிலேயே அவர் பெரும்பாலும் இருந்தார். வீடு, டிவி வேறொன்றுமில்லை. நல்ல உடல்நலத்துடன் எப்பொதும் சுறுசுறுப்பகக் காணப்படும் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிகிச்சையெடுத்துக்கொண்ட ஒரே வருடத்தில் இறந்தார். இப்போது அவரது மனைவி தனது பெருமளவு வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிறார். தண்ணீர்க்குடம் தூக்கி வைப்பது முதற்கொண்டு பல வேலைகளையும் தானே செய்கிறார். தனது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் அவர் மீதமுள்ள காலத்தைத் தனியே கடக்க வேண்டும். ஆனால் குடும்பத்தின் நிதி சார்ந்த விசயங்கள் அனைத்தையும் தனது மனைவியிடம் பகிர்ந்ததனால் அவருக்கு இப்போது பணப்பிரச்சினை ஏதுமில்லை. இத்தனைக்கும் அவர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.

ங்களது அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளர்களிடம் இரண்டு விசயங்களை அவதானித்து வருகிறோம்.
1.   கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது.
2.   கணவன் மட்டும் வேலைக்குப் போகும் வீடுகளில் பெண்கள் குடும்ப நிதிச் சூழல் பற்றி ஒரு தோராயமான கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். இத்தனைக்கும் இவர்களில் பலர் நன்கு படித்தவர்கள் (எம்பிஏ க்களும் அடக்கம்).
மேலே சொன்ன அவதானிப்பில் குடும்ப நிதி மேலாண்மை என்று எதைச் சொல்கிறேன் என்பதை விளக்கினால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு குடும்பம் என்பது பொருளாதாரச் சமூகத்தில் ஒரு சிறிய நிதியமைப்பு. ஒரு அமைப்பின் நிதி நலனில் அதன் உறுப்பினர் அனைவருக்கும் சமமான அக்கறை இருக்க வேண்டும். அதாவது ஒரு தனி நபர் (அவர் சம்பாதிப்பவராகவே இருந்தாலும்) எடுக்கும் எந்த முடிவும் அமைப்பிலுள்ள பிறரையும் பாதிக்கும் என்பதே. அதனால் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் (பதின்ம வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை விட்டு விடலாம், மிஞ்சுவது கணவன் மனைவி இருவரும்) எவரொருவர் எடுக்கும் நிதிசார்ந்த முடிவகள் பற்றித் தெளிவாக அறிந்திருப்பதுடன், அந்த நிதிசார்ந்த முடிவுகள் அவர்களது எதிர்கால நிதி வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதைத் தெளிந்து இருப்பது மிகவும் அவசியம். ஆக, இருவரும் கலந்து பேசி எடுக்கும் நிதி முடிவுகளினால் ஏற்படும் எதிர்கால ஏற்ற இறக்கங்களை இருவரும் சேர்ந்தே சந்திப்பதே சிறந்த குடும்ப நிதி மேலாண்மை எனலாம். இங்கே நாம் அவர்கள் எடுக்கும் முடிவிகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேசவில்லை. அது வேறு விசயம். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய நிபுணத்துவம் பற்றியது.

மேலே சொன்னபடி, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் நிதி முடிவுகள் இருவரும் கலந்து பேசியே எடுக்கப் படுகின்றன (எங்களது அனுபவத்திலிருந்தே சொல்கிறோம்). இதற்குக் காரணமாக இவற்றைச் சொல்லலாம்.
·         திருமணத்திற்கு முன்பே இருவரும் வேலைக்குச் சென்று வருவதால் ஏற்படும் பணம் சம்பாதிப்பது பற்றிய புரிதல் (இது வீட்டில் இருக்கும் மனைவிக்குக் குறைவு)
·         சம்பாதிப்பது பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் (வீட்டுப் பெண்கள் ஒரு சிறு விசயத்துக்கூட கணவனைப் பணத்திற்காக எதிர்பார்ப்பது – கொடுக்க மாட்டார் என்பதில்லை, ஆனால் இது ஒரு விதமான (அவர்களுக்குச் சலிப்பூட்டகூடிய) சார்ந்திருக்கும் மனப்பாங்கையே தருகிறது)
·         வேலைச் சூழலில் இருந்து (சக பணியாளர்களின் அனுபவங்கள் மற்றும் நிதிப்பிரச்சினைகள் மூலமாக) ஒரு பெண் தெரிந்துகொள்வது. அதன் மூலமாக கணவனுக்கு இணையாக குடும்ப நிதி மேலாண்மையில் பங்களிப்பது. வீட்டுப் பெண்களுக்கு இது தங்களது குடும்ப நபர்களிடமிருந்தே கிடைக்கும்.

ரி. அப்படியென்றால் வீட்டிலிருக்கும் பெண்கள் அதைச் சிறப்பாகச் செய்யமுடியாதா? கண்டிப்பாக முடியும். அப்படியுள்ள குடும்பங்களும் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன. ஆனால் மொத்ததில் ஒன்றிரண்டே. அதற்குக் காரணமாக நாங்கள் பார்ப்பது கணவர்களின் இடைவிடாத ஊக்கமும் நச்சரிப்பும்தான். நீண்ட கால நோக்கில் பார்த்தால் இந்த கணவர்கள் குடும்ப நிதி மேலாண்மையை எளிதாக்குகிறார்கள். மனைவிக்கு நிதிசார்ந்த முடிவுகளை (எந்தச் சோப்பை வாங்குவது என்பது பற்றியல்ல) எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாக துணிச்சலையும் பங்களிக்கும் மனப்பாங்கையும் தருகிறார்கள். இது எதிர்காலத்திற்கு (மிக வேகமாக நகரமயமாகும், மனித உறவுகள் அந்நியமாகிக் கொண்டிருக்கிற இந்தியா) மிகவும் அவசியமாகும். இனி வரும் காலத்தில் பிள்ளைகளோடு வாழ்வது என்பது சாத்தியமல்ல. ஓய்வுக் காலத்தை கணவனும் மனைவியும் சேர்ந்துதான் ((உறவினர் மற்றும் பிள்ளைகளின் அண்மையின்றி) வாழ வேண்டிய சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

தற்கெல்லாம் மேலாக, ஒரு கணவன் தான் இல்லாத போது தனது மனைவி குடும்பத்தை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதை எண்ண வேண்டியிருக்கிறது. முக்கியமாக எல்லாவற்றையும் கடன் வாங்கி நுகரும் இந்தக் காலத்தில். பொதுவாக ஒற்றை முடிவு (கணவனே அனைத்து நிதி முடிவுகளையும் எடுப்பார்) அதிகாரம் கொண்ட குடும்பங்களில் அது ஏன் நடக்கிறது என்று எண்ணும்போது கீழ்க்கண்ட காரணங்கள் நினைவுக்கு வருகின்றன.
1.   வேலைக்குச் செல்லும் கணவன் தனது தந்தையைப் பிரதியெடுப்பது (இது 1970கள் இல்லை என்பதை உணராமல்).
2.   தானே அனைத்தையும் எல்லாக் காலத்திலும் பார்த்துக் கொள்ளமுடியும் என்ற தவறான புரிதல் (தனது நீடித்த உடல் நலம், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய போதிய புரிதலின்மையின் விளைவு).
3.   தான் சம்பாதித்த பணத்தைச் செலவிடுவதை யாருக்கும் (மனைவிக்கும் கூட) சொல்லதேவையில்லை என்ற மனப்பாங்கு. இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. தான் யாருக்கும் (உறவினர்கள், நண்பர்கள்) உதவி செய்வது மனைவிக்குப் பிடிக்காது என்பதால் மறைப்பதும் உண்டு.
4.   முன்னதுக்கு முற்றிலும் எதிரானது. குடும்பத்தைச் சமாளிக்க தான் வாங்கும் கடன் மனைவிக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம். பணப் பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியாதவன் என்ற பிம்பம் குடும்பத்தின் மீதான தனது அதிகாரத்தைச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் கூட இதற்கு ஒரு காரணம்.
5.   மனைவியின் ஆற்றலைக் குறைவாக எடைபோடுதல் (சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது தவிர வேறொன்றும் தெரியாது என்ற மனப்பாங்கு). பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரியான மனைவியையே கூட இப்படி வைத்திருப்பார்கள்.

ணவர்களையே இதற்கு முழுப் பொறுப்பாக்க முடியாது. கணவர் எடுக்கும் நிதி சார்ந்த முடிவுகள் தன்னையும் குழந்தைகளையும் சேர்த்தே பாதிக்கும் என்று மனைவி உணரவேண்டும். அதனால், அதை அறிந்து கொள்வதிலும், அது பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்வதிலும் தனக்கு இருக்கும் உரிமையை (பொறுப்பை) வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதொன்றும் கணவனை அவமரியாதை செய்வதாகாது. எதையாவது செய்து தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும் என்று வசதியாக இருந்துகொள்வது மிகவும் தவறு. கார்ப்பரேட் வேலையானாலும் சரி, தொழில் முனைவோரானாலும் சரி நிச்சயமற்ற நிதிச் சூழலை எதிர்கொள்ள குடும்பத்தில் இருவருமே சமமாகப் பங்களிக்க வேண்டிய காலம் இது.



Wednesday, February 13, 2013

பரேட்டோ விதி


த்மநாபன் சென்னையிலிருந்து இயங்கும் ஒரு நிதி திட்டமிடல் நிபுணர். தொடர்ந்து  நாணயம் விகடனில் நிதித் திட்டமிடல் பற்றியும் முதலீடுகள் பற்றியும் எழுதி வருகிறார். சன் செய்திகளிலும் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். பணவிவகாரத்தில் இவரது முதல் பதிவு இது.

பரேட்டோ விதி
இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், 20 சதவீத பணக்காரர்கள் உலகின் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பொருந்தினாலும் பெரும்பாலும் யாரும் அதைச் சிந்திப்பதில்லை.
ஒருவர் மதம் ரூ.50000 சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அதில் 80 சதவீதமான ரூ.40000 செலவு செய்துவிட்டு 20 சதவீதமான ரூ.10000 சேமிக்கிறார். இவர் 21 வயதில் வேலைக்குச் சென்று 25 வயதில் மணம் செய்கிறார். இவர் 55 வயதில் ஓய்வு எடுப்பதாக வைத்துக் கொண்டால் பணிக்காலம் இன்னும் 30 வருடங்கள் உள்ளன. ஒவ்வொரு சம்பள உயர்வுக்கும் சம விகிதாசாரத்தில் செலவும் இருக்கும். ஒரு கணக்குக்காக சம்பளமும் செலவும் அடுத்தட 30 வருடங்களுக்கு மாறாது என்று வைத்துக் கொள்வோம்.
ஆக அவர் அடுத்த 30 வருடத்தில் ரூ. 1.80 கோடி (50,000*12*30) சம்பாதிப்பார். அதில் 1.44 கோடி ரூபாயை தனது வாழ்க்கை முறையை தக்கவைக்க செலவு செய்து செய்தது போக மீதமுள்ள ரூ.36 லட்சம் மட்டுமே சேமிக்கப்படும்.
55 வயதுக்குப் பிறகு வருமானமே இருக்காது அல்லது மிகக் குறைந்த வருமானமே இருக்கும். 15% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி அவரது சேமிப்பு ரூ.10,000 அடுத்த 30 வருடத்தில் 7 கோடி ரூபாய் ஆகியிருக்கும். 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி கூட ரூ. 3.52 கோடி கிடைக்கும். இது அவரது மொத்த 30 வருட உழைப்பூதியத்தை விட அதிகம். வெறும் 3% அதிக வ.கூ.வ. விகிதம் முதலீட்டை இரட்டிப்பாக்கி விடுகிறது. தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் (SENSEX) 17% வ.கூ.வ. விகிதம் கொடுத்துள்ளது. உயர் தரமான பரஸ்பர நிதிகள் இதுவரை 20% க்கும் மேலான வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டில் 15% வ.கூ.வ. விகிதம் கிடைக்கும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.  
இங்கே பிரச்சினை என்னவென்றால், பலர் தங்களது வருமானத்தில் 10% கூட தொடர்ச்சியாக சேமிப்பதில்லை. செல்வ வளத்தை உருவாக்குவது குழந்தை விளையாட்டு, ஒழுங்கு மட்டும் இருந்தால்.

Thursday, January 3, 2013

பங்குச்சந்தை முதலீடு - ஒரு நேர்காணல்


PRASHANT JAIN, EXECUTIVE DIRECTOR AND CHIEF INVESTMENT OFFICER, HDFC MUTUAL FUND 

 ஹெச் டி எப் சி பரஸ்பர நிதியின் (HDFC Mutual Fund) முதன்மை செயல் அலுவலரும் (CEO) செயல் இயக்குனருமான (Executive Director) பிரஷாந்த் ஜெயின் தி ஹிந்து பிசினஸ்லைன் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து சில விஷயங்கள்.   
  • முதலீடு பற்றிய எனது அணுகுமுறை மிக எளிமையானதாகவே இருந்திருக்கிறது. நல்ல நிர்வாகிகளால் மேலாண்மை செய்யப்படும் தொடர்ந்து தாக்குபிடிக்கக் கூடிய தொழில்களை , நல்ல விலையிலோ குறைவாகவோ வாங்கி போதுமான அளவுக்குப்  பன்முகப்படுத்தி பொறுமையோடு இருப்பது.
  • நல்ல மதிப்பீட்டில் கிடைக்கும் தரமான, தாக்குப்பிடிக்கக்கூடிய தொழில்களில்முதலீடு செய்வது முதலீட்டு செயல்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
  • ரிஸ்க் கட்டுப்படுத்த வேண்டி, மோசமான நேரங்களிலும் நெருக்கடிக்கு பணியாமல் இந்த ஒழுங்கைத் தக்க வைப்பது முக்கியம்.
  • குறைந்த பட்ச வீழ்ச்சி அபாயத்துடன் ஓரளவு தொடர்ச்சியாக மிதமான வருமானத்தை உற்பத்தி செய்யும் ஒரு முதலீட்டாளர், சில நேரங்களில் அபிரிமிதமான வருமானத்தையும் ஆனால் சமயங்களில் குறிப்பிடத்தக்க நட்டங்களையும் ஏற்படுத்தும் முதலீட்டாளரோடு  ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பார். 16 சதவிகித பத்தாண்டு  வருமானம் என்பது  20 சதவிகித 9 ஆண்டு வருமானத்தைத் தொடர்ந்த பத்தாவது வருட 15 சதவிகித நட்டத்தைவிட அதிகமாக இருக்கும்.
  • நான் பங்குச்சந்தையில் இருந்து வந்துள்ள 20 வருடங்களில் 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்துள்ளதோடு அந்த ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் தவறிழைத்ததை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இது சங்கடமானது ஆனாலும் துரதிர்ஷ்டவசமான உண்மை.
  • கடந்த 20 ஆண்டுகளாக நான் பங்குச் சந்தையில் இருந்து வந்துள்ள காலத்தில், 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்ததோடு, ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பாலான  முதலீட்டாளர்கள் காலம் தவறுவதைப் பார்த்திருக்கிறேன். இது சங்கடமானாலும் உண்மை.
  • 2008 மார்ச்சில் 15600 அளவுகளில் முடிவதற்கு முன், 2003 ல் 3000 அளவுகளிலிருந்து  2008 ஜனவரியில் 21000 க்கு மேலான உச்சத்திற்கு சென்செக்ஸ் (SENSEX) சென்றபோது, பங்குச்சந்தை பரஸ்பர நிதி (EQUITY MUTUAL FUND) விற்பனை 2002-2003ல் வெறும் ரூ.118 கோடியிலிருந்து 2007-2008ல் ரூ.53,000 கோடிக்கு உயர்ந்தது. அதிலிருந்து, 2009 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில், சரியும் சந்தையிலும் குறைந்த PE மடங்குகளிலும் பரஸ்பர நிதி ரூ.6000 கோடி வெளியேறக் கண்டிருக்கிறது. எளிதாகச் சொன்னால், PE அதிகமாக இருந்த காலத்தில், 2008 நிதியாண்டில் மட்டும் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி வாங்கப் பட்டிருக்கின்றது. ஆனால் PE குறைவாக இருந்தபோது நான்கு வருட காலத்தில் கிட்டத்தட்ட ரூ.6000 கோடி மதிப்புள்ள பங்கு நிதி விற்கப்பட்டது.
  • இது ஏனென்றால், முதலீட்டாளர்கள் PE* மடங்குகளில் (PE Multiple) மீதல்லாது கடந்த கால வருமானம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதுதான்.
  • முதலீட்டாளர்கள் குறைந்த PE மடங்குகளில் முதலீடு செய்யப் பழக வேண்டும். சந்தை சரியாக இல்லாத காலத்தில், சந்தையின் மனநிலை பலவீனமாக இருக்கும்போது செய்திகள் மோசமாக வரும்போதுதான் குறைந்த PE அளவுகள் கிடைக்கும்.
  • தற்போது சந்தை 20 சதம் மேலிருந்தாலும் PE விகிதம் நீண்டகால சராசரிக்கும் கீழேயே உள்ளது. மேலும், வட்டி விகிதம் கீழே செல்ல வாய்ப்புள்ளது.
  • எனது கருத்தில், முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் தாக்குபிடிக்கும் திறனுக்கு ஏற்றவாறும் நீண்டகால நோக்கிலும் பங்குகளில் ஒதுக்கீடு செய்வதைக்  கூட்டுவதையோ தக்கவைத்துக் கொள்வதையோ செய்ய வேண்டும்.
   * PE - Profit Earnings Ratio = ஒரு பங்கின் விலை / ஒரு பங்கின் வருமானம் 

Monday, November 19, 2012

மருத்துவக் காப்பீடு

 
ந்த வார நாணயம் விகடனில் வெளியான எனது மருத்துவக் காப்பீடு பற்றிய கட்டுரை இங்கே. - அபூபக்கர் சித்திக், CFP

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பொதுக் காப்பீடு நிறுவனங்களே அதிக அளவில் வழங்கி வந்தன. ஆனால், சமீப காலமாக ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் இந்த பாலிசிகளை வழங்கி வருகின்றன. இவற்றில் எது பெஸ்ட் சாய்ஸ்? என்பதைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் அபுபக்கர்.  


''ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் (Stand alone) மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் பல்வேறு வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இவற்றில் ஏராளமான உட்பிரிவுகள் அடக்கம். இவற்றில் நமக்குத் தேவையான மற்றும் சரியான திட்டத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதைப் பார்க்கும் முன் நமக்குக் கிடைக்கும் பல்வேறு திட்டங்களை வகைப்படுத்தி முதலில் அறிந்துகொள்வோம்.
* மருத்துவமனை செலவு (Hospital Cash);
* பணப் பலன் (Defined Benifit plan);
* தீவிர நோய் பாதிப்பு (Critical illness);
* தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal accident);
* ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் (comprehensive health insurance)
இந்த ஐந்து வகையான திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களைச் சேர்த்தோ அல்லது தனித் தனியாகவோ மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறது.
மருத்துவமனை செலவு!
மருத்துவப் பரிசோதனை இல்லை; வயது வரம்பு இல்லை; எந்த மருத்துவமனையிலும் சேரலாம் என்று வரும் விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தது.
இந்த வகையானத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை உதாரணத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு தினத்திற்கும் தருவார்கள். இந்த தொகைக்கும் மருத்துவச் செலவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக, நீங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால், இந்த பாலிசிபடி 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த ஐந்து நாட்களில் நீங்கள் செய்த மருத்துவச் செலவுகள் எதற்கும் கிளைம் செய்ய முடியாது.
ஏற்கெனவே, பிரதான மருத்துவக் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்கள் வேண்டுமானால் இத்தகைய பாலிசியைக் கூடுதலாக எடுக்கலாம். ஆனால், இதற்கான பிரீமியம் அதிகம். பொதுவாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற பாலிசியை அதிகமாக விற்பனை செய்கின்றன.
உங்களுக்கு இந்த பாலிசி தேவைப்பட்டால், பொதுக் காப்பீடு அல்லது தனித்துவ மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முழுமையான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் ரைடர் பாலிசியாக (துணை பாலிசி) இதை சேர்த்துக் கொள்ளலாம்.
பணப் பலன்!
இந்த வகையான திட்டம் முன்வடிவமைக்கப்பட்ட மருத்துவச் செலவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தொகையை அளிக்கும். இதில் 90% வரையறுக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவைச் சார்ந்தது. இந்த வகையான திட்டங்களில் பல நேரங்களில் நீங்கள் உங்கள் கையிலிருந்து தொகையை தர நேரிடும். இதிலும் ஏகப்பட்ட விதிமுறைகள், வருடாந்திர வரன்முறை, அட்டவணையில்லா நோய்கள் என்று ஏக கெடுபிடிகள். இந்த வகையான திட்டங்களை சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக விநியோகிக்கின்றன. கவனித்து பாலிசிகளை தேர்வு செய்யவும்.    
தீவிர நோய் பாதிப்பு!
மிகக் கடினமான நோய்கள் கண்டறியப்பட்ட பின் ஒரு பெருந்தொகையோ அல்லது மாதாந்திர தொகையோ, அல்லது மருத்துவச் செலவை ஏற்கக்கூடிய பாலிசி இது. இத்தகையத் திட்டங்களை எல்லா தரப்பு நிறுவனங்களும் அளிக்கின்றன. புற்றுநோய், மூளை புற்றுநோய், பக்கவாதம், இருதய பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவற்றிற்கு இதன் கீழ் கவரேஜ் கிடைக்கும். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தீவிர நோய் வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் பரம்பரை வியாதிகள் உடையவர்களுக்கும் இந்த திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்து அத்துடன் தீவிர நோய் பாதிப்பு பாலிசியை துணை பாலிசியாக எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.
தனிநபர் விபத்துக் காப்பீடு!
இந்த பாலிசியை வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். செய்யும் தொழில் வகையைப் பொறுத்து பிரீமியம் மாறும். இந்த வகையானத் திட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உடல் சேதங்களுக்கோ, உயிர் இழப்பிற்கோ இழப்பீடு வழங்கப்படும். பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் விபத்துக் காப்பீடு திட்டம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசிகளில் ஓரிரு பயன்பாடு குறைவாக இருக்கும். 10 லட்ச ரூபாய் கவரேஜ் ரைடர் பாலிசிக்கு நிறுவனத்தைப் பொறுத்து 350 ரூபாய் முதல் 700 ரூபாய் பிரீமியம் இருக்கும். பல பொதுக் காப்பீடு நிறுவனங்களின் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிக அத்தியாவசியமான பாலிசி.
ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டம். இத்திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டறியப்பட்ட சில நோய்களைத் தவிர, அனைத்து மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியது. பொதுவாக, உள்நோயாளி பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துச் செலவுகளும் குறிப்பாக அறை வாடகை, ஆய்வகக் கட்டணம், நர்ஸிங் கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் ஏற்கப்படுகிறது. ஒருவரின் மருத்துவமனைச் செலவுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது என்றால், அந்த நோய்க்குரிய மருத்துவமனை உள்நோயாளி செலவினங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும்முன் ஏற்பட்ட செலவுகளும், அதற்குபின் ஏற்படும் செலவுகளும் (Pre & Post Hospitalization) காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
இதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இவை குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது. விலையை வைத்து மட்டும் பாலிசிகளை மதிப்பிட முடியாது. இத்தகையச் சிறந்த திட்டங்களை நியூ இந்தியா, யுனைடெட், பஜாஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் ஸ்டார், மேக்ஸ், புபா, அப்போலோ போன்ற தனித்துவ காப்பீடு நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இத்தகைய திட்டங்கள் இல்லை.
முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்கள் கிளைம் சேவைகளை மூன்றாம் நிறுவனத்திடம் (TPA - Third Party Administrator) தந்துவிடுகின்றன. அனைத்து சேவைகளுக்கும் நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் சேவை நிறுவனத்தையே அணுக வேண்டும்.
முடிவாக..!
பொதுவாக எந்த மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மகப்பேறு, பல் சார்ந்த சிகிச்சைகள் (விபத்தினால் ஏற்படுவதைத் தவிர), புறநோயாளி சிகிச்சைகள் மற்றும் ஒரு நாளுக்குள் வரும் உட்பிரிவு சிகிச்சை செலவினங்களுக்கு இழப்பீடு தருவதில்லை. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சில மணி நேரத்திலேயே அனுப்பி விடப்படும் சிகிச்சைகளும் உண்டு. உதாரணமாக, கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றல் போன்ற 130-க்கும் மேற்பட்ட உலக சுகாதார நிறுவனம் பட்டியலில் உள்ள நோய்களுக்கு உட்பிரிவு சிகிச்சை இல்லாமலேயே செலவுகள் காப்பீடு நிறுவனங்களால் ஏற்கப்படுகின்றன.
மேலும், நிறுவனங்கள் அளித்துள்ள மருத்துவமனை சேவைப் பட்டியலை பார்ப்பதும் முக்கியம். ஏனெனில், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் ஆகும் செலவுகளை காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக செலுத்திவிடுகிறது. மற்ற மருத்துவமனைகளில் நீங்கள் முதலில் செலவு செய்துவிட்டு, பிறகு உரிய ஆவணங்களை காப்பீடு நிறுவனத்திடம் உரிய காலத்திற்குள் செலுத்திவிட்டு பணத்தை பெற வேண்டிவரும். அதிலும் சில காப்பீடு நிறுவனங்கள் 10 முதல் 20% தொகையைப் பிடித்தம் செய்கின்றன.
எனவே உஷார்!''
கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டோம்! இனி எது பெஸ்ட் என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!

Saturday, September 15, 2012

சீரான முதலீட்டுத் திட்டம் - பகுதி 1

ந்த முதலீட்டு வகை பற்றியும் உணர்சிகரமான பிடிப்பு தேவையற்றது. பொதுவாகவே முதலீட்டு வகைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத (மெத்தப் படித்தவர்களும் அடக்கம்) ஒரு நாட்டில் சிக்கலான, வெளிப்படைத்தன்மையற்ற, அபாயகரமான ஏற்ற இறக்கங்களுடைய நீண்டகால முதலீடுகள் பற்றிய தெளிவு ஏற்பட அதிக காலம் ஆகலாம். முதலில் அதைக் கற்றுக் கொடுப்பவர்கள் உள்நோக்கம் ஏதுமற்ற நேர்மையோடு இருக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சீரான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றிய தெளிவை கொடுக்கவே இந்தக் கட்டுரை.
மாத வருமானக்காரர்களோ, பெரு முதலீட்டாளர்களோ சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும் விதங்கள் பற்றி நாம் முன்பு பேசியிருக்கிறோம். http://panavivakaram.blogspot.in/2011/09/blog-post_26.html
சீரான முதலீட்டுத் திட்டம் ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும் (Mutual Fund). நேரடியாக பங்குகளை வாங்கி வைத்து நேரம் பார்த்து விற்று லாபமீட்டும் வேலையைச் செய்து அந்தத் தொகுப்பை (Portfolio) நாள்தோறும் நிர்வகிக்கக் கூடிய நேரமும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள், அவ்வாறு செய்யக்கூடிய தகுதி (கல்வியும் அனுபவமும்) உள்ளவர்களிடம் தங்கள் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்யச் சொல்வது. இப்படிச் சேரும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் நிதியை (Mutual Fund) நிர்வகிப்பவரே பரஸ்பர நிதி நிர்வாகி (Fund Manager). முதலீட்டாளர்களிடம் ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு இதைச் செய்யும் நிறுவனமே சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Management Company). சொத்து என்றாலே மண்ணும் பொன்னும் மட்டுமல்ல.
இப்படி ஒரு நிதியில் சேரும் பணம் நிர்வாகியால் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு நிதியும் ஒவ்வொரு வகையில் நிர்வகிக்கப்படும். நிதியை ஆரம்பிக்கும் போதே (Initial Public Offering - IPO) நிர்வாகி அதன் வகை பற்றி அறிவிப்பார். எடுத்துக்காட்டாக 'டாப் 100' என்ற நிதியில் பணம் முழுதும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். 'பாலன்சுடு பண்டில்' 50 சதம் பங்குகளிலும் 50 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இது போல. 
முதலீட்டாளர் தனது ரிஸ்க் எடுக்கக்கூடிய நிலைக்கு ஏற்ப ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆக சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) என்றால் என்ன?
பரஸ்பர நிதி முதலீட்டில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் நேரடியான பதிப்பு எப்போதும் உண்டு. நீங்களே வாங்கி நிர்வகிக்கும் பங்குகளின் தொகுப்பு போல அது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். என்ன அது சற்று தேர்ந்த அனுபவமுள்ள தகுதி படைத்த நிர்வாகியால் செய்யப்படும். ஆனால் மொத்த முதலீடாக இல்லாமல் சிறிது பணத்தை மாதந்தோறும் ஒரு நிதியில் போடுவதே சீமுதி. எடுத்துக்காட்டாக மாதம் ரூ.500 போல. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கியமான பயன், நல்ல பெரும் பங்குகளை (பல நூறு ருபாய் மதிப்புள்ள) வாங்கும் அளவு பணம் இல்லாத போது இப்படிப்பட்ட நிதியில் பணம் போடுவதன் மூலம் அப்பயனை அடைய முடியும். 

சில அனுகூலங்கள்  
  • பங்குச் சந்தையின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்ப ஒரு அலகின் (Unit) விலை ஏறி இறங்கும். சீராகத் தொடர்ந்து முதலீடு செய்கையில் வெவ்வேறு விலையில் ஒரு அலகு வாங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படியில் அது சாதகமான சராசரி விலையை அளிக்கிறது. இதை 'விலைச் சராசரி' (Ruppee Cost Averaging) என்கிறார்கள். விளங்கிக்கொள்ள படத்தைப் பாருங்கள்.Rupee Cost Averaging        மொத்த முதலீடு என்றால் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அலகு இங்கே சராசரி விலை ரூ.9.836 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
  • கூட்டுப்பெருக்கத்தின் சக்தி. ஏற்கனவே உள்ள முதலீடு பணம் ஈட்டும் போது மேலும் புதிய முதலீடுகள் சேர்ந்து கொண்டே போகையில் பணம் பன்மடங்காகப் பெருகும்.
     Power of Compounding 
அது போக சீரான முதலீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயனே சந்தை காளையா கரடியா என்று நேரம் பார்த்துக் கிடக்கத் தேவையில்லாமல் எல்லாக் காலத்திலும் கவலையில்லாமல் தொடர்ந்து முதலீடு செய்யத் தோதானது என்பதே.
 
எப்படிச் செய்வது? 
  • எதற்காக (எதிர்காலத் திட்டங்கள்- திருமணம் போன்றவை) முதலீடு செய்கிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்வது.
  • அந்தக் கால அளவிற்கு ஏற்ப தேவைப்படும் மாதத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் கணித்துக் கொள்வது.
  • சரியான நிதி திட்டத்தை அனுபவமுள்ள நிதித் திட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.
  • பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீண்டகாலம் முதலீட்டைச் செய்வது.
  • நிதித் திட்ட ஆலோசகரின் உதவியுடன் திட்டத்தைக் கண்காணிப்பதுடன் தேவைப்பட்டால் மாற்றம் செய்வது.
 

Friday, January 20, 2012

உடைமைத் திட்டமிடுதல் (Estate Planning)

அல்லா உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள். அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள். உடையும் வழங்குங்கள்.  அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்.
- திருக்குர்ஆன்

ழைய திரைப்படங்களில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு கிழவர் வக்கீலைக் கூப்பிடச் சொல்வார். இனிமேல் தான் நீண்ட காலம் வாழ மாட்டோம் என்று உணர்ந்து தனது சொத்தை உயில் எழுதி வைக்க நினைத்து அப்படிச் சொல்வார். தொலைந்து போன உயிலைக் கண்டுபிடிப்பது போன்று கூட திரைக்கதைகள் உண்டு. அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். பொதுவாகவே நமது சூழலில் இதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வேலை என்ற எண்ணமே இருக்கும். ஆனால், சிறிய சொத்தானாலும் பெரிய சொத்தானாலும் பிரச்சினை ஒன்றுதான்.

உடைமைத் திட்டமிடுதல் என்றால் என்ன?
உங்களிடம் உள்ள சொத்தை (உடமை) அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்தளிப்பதே உடமைத் திட்டமிடுதல். சொத்து என்றதும் பலவாறாக நினைத்து வீடு, நிலங்கள், தோட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ரொக்கப் பணம், சொத்து, தங்கம், காப்பீட்டுத் திட்ட முதலீடு, சேம நல நிதி, பங்குகள், வைப்பு நிதி, சொத்திலிருந்து வரும் வருமானம் போன்ற அனைத்தும் உடமை (Estate) என்றே கருதப்படும்.
குறிக்கோள் 
  • நீங்கள் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னாலும் சொத்தை நிர்வகிப்பது.
  • உங்கள் சொத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத அபாயங்களிலிருந்து அவற்றைக் காப்பது. 
  • அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விரும்பியவாறு அதைச் சரியானவர்களிடம் கொண்டு செல்வது.
சேவைகள்
  • ஆலோசனை சேவை. உடமைத் திட்டமிடுதல் பற்றிய வரையறைக்குள் திறம்பட சொத்துக்களை நிர்வாகம் செய்வதோடு அடுத்த கட்ட வாரிசுகளுக்கு கொண்டு சேர்ப்பதையும் மேற்பார்வை செய்வது.
  • உயில்கள், டிரஸ்ட் ஏற்படுத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது.
  • அசையும் சொத்துக்களான நகைகள், உரிமைப் பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. இந்த சேவைகளை சில வங்கிகளும் அளிக்கின்றன.
டிரஸ்ட் - இது ஒரு நிர்வாக அமைப்பு. ஒருவரின் வாழ்நாளில் சொத்துக்களை நிர்வாகிப்பது. 
உயில் - தனக்குப் பிறகு சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்று ஒருவர் எழுதி வைக்கும் சட்ட ஆவணம்.

தற்போதைய வளர்ந்து வரும் நிதிச் சூழலில் சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் இது போன்ற நிபுணத்துவ சேவைகளை தகுதியான ஆலோசகரிடம் பெறுவது முக்கியம். இல்லாவிட்டால் உழைப்பின் பலனை சரியாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடலாம். ஒரு நல்ல நிதித் திட்டமிடுபவரை (CFP - Certified Financial  Planner) பார்க்கலாம். இந்த இணையம் உதவும்.

அபூபக்கர் சித்திக், CFP 

  

Wednesday, December 21, 2011

நிதிப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது!

ன்லைனில் காப்பீடு அல்லது பரஸ்பர நிதி அல்லது வேறு நிதிச் சேவைகளை வாங்குவது ஒரு எளிதான காரியம். இணையத்தில் எப்பொழுதும் உலவிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக எளிது. ஏதேனும் கேள்வி எழுந்தால் உடனே கூகிள் செய்து விடலாம். ராக்கெட்டே செய்யலாம். இந்த வலைப்பதிவில் எழுதப்பட்ட முதல் பதிவே அது பற்றியது தான்.
ஒப்பீட்டு இணையதளங்களும் நிதிச் சேவையும்
http://panavivakaram.blogspot.com/2011/03/blog-post.html

நேற்று எகனாமிக் டைம்ஸில் படித்த ஒரு செய்தி இது. ஆன்லைனில் பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்ய விரும்புவோர் ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ந்தால் மட்டுமே ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். மானிடரி ஆதாரிட்டி ஒப் சிங்கபூர் (Monetary Authority of Singapore) நடத்தும் ஆன்லைன் பாடங்களைப் படித்து, பதிலளித்து தேர்ந்தால் மட்டுமே அவர்கள் ஆன்லைனில் பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்வது உலகிலேயே இதுதான் முதல் முறை. தேறாதவர்கள் நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், 2008 வாக்கில் ஆயிரக்கணக்கான சிங்கபூரர்கள், குறைந்த அபாயமுள்ளது (low  risk) என்று நம்பப்பட்ட லெமான் பிரதர்ஸ் (Lehman Brothers) சிறு பத்திரங்களில் (Mini Bonds) முதலீடு செய்து பணத்தை இழந்ததே.


இதில் ஒரு விஷயம் என்னவென்றால், தெரியாமல் பணத்தை போட்டு இழப்பதைத் தவிர்த்தாலும், யாரிடம் நல்ல ஆலோசனையைப் பெறுவது என்பது குறித்த வரையறை செய்வது. இந்தியாவில் இதற்குத் தேவை அதிகம். நிதி ஆலோசகர் யார் என்ற வரையறையோடு தரப் படுத்துதலும் முக்கியம். தற்பொழுது உள்ள ஒரே தேர்வு சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவர்களே (Certified Financial Planners). மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளம் உதவும்.
http://www.fpsbindia.org/

Wednesday, November 23, 2011

காப்பீடு எடுக்கும்போது செய்ய வேண்டியவை

ரு விற்பனையில் விற்பவருக்கு எவ்வளவு பொறுப்பு வேண்டுமோ, அதற்குச் சமமாக வாங்குபவருக்கும் வேண்டும். அதுவும் நிதிப் பொருட்களை வாங்கும்போது. உள் விசயங்கள் தெரியாது என்பது ஒரு காரணம் அல்ல. ஐந்து லட்சத்திற்கு கார் வாங்கும்போது கேட்கும் கேள்விகளில் சிறிதளவாவது ஒரு ஐந்து லட்சத்தை முதலீடு செய்யும் போது கேட்பதில்லை. அதிலும் காப்பீடு எடுப்பதை ஒப்பிட்டால் முதலீடு செய்யும் போதுள்ள கவனம் பரவாயில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதே பலரும் கடைபிடிப்பது. காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம்.
 நமது தலைமை நிதித் திட்டமிடுபவர், அபூபக்கர் சித்திக் (CFP), இதைப்பற்றிக் கூறும்போது வாடிக்கையாளர்கள் கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

  1. காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணி பற்றி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. சில மறைந்துமுள்ளன. பொதுவாக காப்பீட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய தொழில் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். நிதிச் சேவை சாராத தொழில்காரர்களும் காப்பீட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார்கள். பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பங்காளி இருக்கிறார் (TATA - AIG யில் AIG போல). நிதி ஆலோசகரிடம் இந்த காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். 
  2. கோரிக்கைத் தீர்வுகள் (Claims Settlement). காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கைதீர்வு வரலாறு அதைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லும்.  எவ்வளவு கோரிக்கைகள் நிராகரிக்கப் படுகின்றன? நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் சதவிகிதம் போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. காப்பீடு விற்பவரிடம் தகவல்கள் இல்லையென்றால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம்.
  3. காப்பீடு என்பது வாடிக்கையாளருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் ஒரு பக்கம் (நிறுவனம்) நல்ல தெளிவோடும் மறு பக்கம் (வாடிக்கையாளர்) தெளிவில்லாமலும் ஒப்பந்தம் செய்வது நல்லதில்லை. அதுவும் வாடிக்கையாளருக்கு. விண்ணப்பப் படிவம் முழுவதையும் படித்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பின்பு, தானே நிரப்புதல் நலம். விற்பவர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாளருக்கு நல்லதல்ல.
  4. காப்பீட்டுப் பத்திரம் (Policy) வந்த பிறகு அதிலுள்ள விசயங்கள் முழுவதையும் படித்துத் தெளிவது முக்கியம். நீங்கள் நினைத்தபடியே ஒப்பந்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீங்கள் தான். புரியாத விசயங்களை நிதி ஆலோசகரிடம் கேட்பது நலம். உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.
  5. கோரிக்கை நேரத்தில் செய்ய வேண்டியது பற்றி. இதைப் பற்றி கோரிக்கை எழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரது நினைப்பு. என்ன ஒரு அபத்தம். ஒரு விபத்து என்று வைத்துக் கொண்டால் நாமே கோரிக்கை எழுப்பும் நிலையில் இருக்க மாட்டோம். நமது குடும்ப உறுப்பினர்களிடம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன்பே தெளிவாகப் புரிய வைத்து விட வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.   

Sunday, October 9, 2011

ஒரு அறிமுகம்

அபு பக்கர் சித்திக் 2008 ல் நிதித் திட்டமிடுதல் சான்றிதழ் (Certified Financial Planner) பெற்றார். அதற்கு முன்பே பண்டகச் சந்தையில் (Commodities Futures Market) நல்ல அனுபவம் உண்டு. பரஸ்பர நிதி (Mutual Fund) மற்றும் காப்பீடு (ஆயுள், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை) விசயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தமிழ்நாடு நிதித் திட்டமிடுபவர் கழகத்திலும் (Tamilnadu Financial Planner's Association - TNFPA http://www.tnfpa.com) முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நண்பர். அவரே எங்களது நிறுவனத்தின் (Accrue - http://www.accruetrade.com/) தலைமை நிதித் திட்டமிடுபவர் (Chief Financial Planner). 
சில மாதங்களுக்கு முன் நாணயம் விகடனில் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்போது (16.10௦.2011 இதழ்), மாதம் ரூ.14500 வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு இவர் தயாரித்த நிதித் திட்டம் நாணயம் விகடனில் வந்திருக்கிறது. பெரிய வருமானம் உள்ளவர்கள் மட்டுமே நிதித் திட்டமிட தகுதியுள்ளவர்கள் என்ற பொதுக் கருத்தை இது உடைக்கிறது. சிறு குடும்பமும் எதிர்காலத்தைத் தெளிவாகத் திட்டமிடலாம் என்பதற்கு நல்ல உதாரணம். பணவிவகாரத்திலும் இவரது கருத்துக்கள் வெளிவரும். கட்டுரையை இங்கே வாசிக்கலாம். http://www.vikatan.com 

இவரது வலைப்பதிவு http://nithivalam.wordpress.com/

Monday, September 26, 2011

முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டந்த வாரத்தில் உலகளவில் பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சி கண்டது. 2008 க்கு பின்னான பெரிய ஒரு வாரத்திய சரிவு. தங்கம் போன்ற பண்டங்களும் சரிந்துள்ளன. சமீபத் தகவல்படி தங்கம் இந்திய சந்தையில் பத்து கிராமுக்கு ரூ.700 அளவும் வெள்ளி கிலோவுக்கு ரூ.5000 அளவிலும் சரிந்துள்ளன. சில மாதங்களாகவே தங்கம் வாங்க பல முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கமே தீர்ந்து விடப் போவது போல. இப்போது வாங்க வில்லையென்றால் எதிர்காலத்தில் வாங்கவே முடியாதது போன்ற பதற்றம் பலரிடமும் காணப் பட்டது. பத்திருபது வருடங்களுக்கு மேலாக சந்தையில் முதலீடு செய்து வரும் எந்த ஒரு நீண்ட கால முதலீட்டாளரும் இதை ஒரு புன்னகையுடன் கடந்து விடுவார்கள். அவர்கள் இதைப் போன்ற காரண காரியமற்ற வாங்குதலைத் தாண்டியே வந்திருப்பார்கள். இது போன்ற நிலையற்ற சந்தையிலிருந்து விலகி நின்று கவனிக்கும் பக்குவத்தை அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கும்.

ங்களது நிறுவனத்தின் அனுபவத்தில் நாங்கள் கையாளும் வாடிக்கையாளரை வகைப் படுத்தினால் இப்படி வரும்.
1 . மாத வருமானக்காரர்கள் 
2 . பணக்காரர்கள் (High Networth Individuals)
3 . தொழில் முனைவோர் 
இவர்கள் பொதுவாக முதலீட்டை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1 . மாத வருமானக்காரர்கள் 
இவர்கள் தங்கள் வளத்தைச் சிறுகச் சிறுகக் கட்டுபவர்கள். நீண்டகாலக் குறிக்கோள் அடிப்படை கொண்டவர்கள். வருமானத்தின் ஒவ்வொரு பைசாவுக்கும் திட்டம் போடக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள். மூவரில் அபாயம் (Risk) குறைவானவர்கள். அறிவையும் உடல் உழைப்பையுமே கருவியாகக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியவர்கள். இவர்கள் இது போன்ற சந்தையைப் பார்த்துப் பதற்றப் படத் தேவையில்லை. அதே நேரம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். இவர்களின் வருமானத்தில் ஒரு பகுதி ஏற்கனவே சேம நல நிதிக்குப் (Provident  Fund) போய்கொண்டிருக்கும். கையில் வரும் பணம் முழுவதும் இவர்களது திட்டத்திற்குள் தான். செலவு போக (ஆயுள் மற்றும் பிற காப்பீடுகளின் செலவுகளையும் சேர்த்து) மீதமுள்ளவற்றை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்பதே கேள்வி. இளம் வயதுக்காரர்கள் (25 -40 வயது) சீரான முதலீட்டுத் திட்டத்தில் (Systematic Investment Plan) பணம் போடலாம். இது மறைமுகமாக சந்தையில் செய்யப்படும் முதலீடு. அதே நேரம் சந்தையின் எல்லா நிலையிலும் (உயர்வு/சரிவு) தொடர்ச்சியாக முதலீடு செய்வதால் அதிக அபாயமில்லாதது. சிறுகச் சிறுகச் சேர்த்து, சேர்ந்த பணத்தை மொத்தமாக பங்குச் சந்தையிலோ தங்கம், வெள்ளி போன்றவற்றிலோ போடுவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஒருவர் கடந்த இரு வருடங்களாக மாதம் ரூ.5000 சேமித்து, சேர்ந்த ரூ.1,20,000 யில் இப்போது தங்கம் ௦௦வாங்குவதை விட, அந்தந்த மாதத்திலேயே அந்தப் பணத்திற்குத் தங்கம் வாங்கியிருந்தால் அதிக பயன் அடைந்திருக்க முடியும். இல்லாவிட்டாலும் முதலீட்டின் மதிப்புக் குறைவையாவது தவிர்க்கலாம். சீரான முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையே இதுதான். சீரான முதலீட்டுத் திட்டம் பற்றித் தனியாகப் பார்க்கலாம். என்ன மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது என்பதை இவர்கள் ஒரு நிதித் திட்டமிடுபவரிடம் (Financial  Planner) ஆலோசனை செய்யலாம். அவர் தனிநபரின் நிதி நிலைக்கேற்ற திட்டங்களை பரிந்துரைப்பார்.

2 . பணக்காரர்கள் (உயர் நிகரமதிப்பு நபர்கள் - High Networth Individuals)
நிதி அடிப்படையில் இவர்களை இப்படி வரையறுக்கலாம். நிகர சொத்து மதிப்பு (வாழும் வீட்டைத் தவிர்த்த மதிப்பு) ஒரு மில்லியன் டாலரும் (தோராயமாக ரூ. 5 கோடி) அதற்கு மேலும் உள்ளவர்கள். ஏற்கனவே இருக்கும் சொத்துக்களிலிருந்து வரும் சம்பாத்தியத்தை வைத்து புதிய முதலீடுகளைச் செய்து மேலும் சொத்துக்களை சேர்ப்பவர்கள். இவர்கள் கொஞ்சம் பணத்தை கையிருப்பாக எப்போதும் வைத்திருப்பார்கள்.வாய்ப்பு வரும் போது முதலீடு செய்யத் தயாராக. அப்படி வைத்திருக்கும் பணத்திற்கு (Liquid Cash) பெரிதாக வரும்படி (Returns) ஏதும் இருக்காது. வங்கியில் குறைந்த வட்டி சேமிப்புக் கணக்கிலேயே பெரும்பாலும் கிடக்கும். அல்லது இரும்புப் பெட்டியில். அதனால் அதை சீக்கிரம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய சொத்தில் முதலீடு செய்யப் பார்ப்பார்கள். அது தங்கம் போன்ற பண்டத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ அல்லது நிலத்திலோ (Real Estate) அல்லது ஒரு தொழிலிலோ செய்யப்படும். இதில் பண்டங்களில் முதலீடு செய்வது இரு வகையில் நடக்கலாம். முதலாவது, நேரடியாக தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வது. இரண்டாவது, பண்டகச் சந்தையில் (Commodity Futures Market) முன் தொகையைக் (Margin) கட்டி வர்த்தகம் செய்வது. இதில் சிறிது பணம் இருந்தாலே போதும். ஆனால் அபாயம் இரண்டிலுமே ஒன்றுதான். இழப்பு கிட்டத்தட்ட ஒரே அளவுதான் இருக்கும். இங்கே முதலீட்டாளர் தெரிந்தே அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது. இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பண வலிமை இருப்பதாலேயே இதைச் செய்கிறார். இதுவே மற்ற இரு வகை முதலீட்டாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துகிறது. பங்குச் சந்தையில் இவர்கள் மூன்று வழிகளில் முதலீடு செய்கிறார்கள். தங்களது கணக்கில் (Demat Account) தாங்களே நேரடியாகப் பங்குகளை வாங்கிப் போடுவது. இதற்கு நேரமும் பங்குகள் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. இரண்டாவது , பங்குத் தொகுப்பு மேலாளர் (Portfolio Manager) ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது. அதாவது, இவர் சார்பாக இவருடைய கணக்கில் பங்குகளை வாங்கி விற்கும் அதிகாரத்தை நன்கு விஷயம் தெரிந்தவரிடம் கொடுப்பது. பங்குத்தரகு நிறுவனங்கள் இந்த சேவையைத் தருகின்றன. மூன்றாவது, பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்வது. இதில் குறைந்த அபாயம் உள்ள திட்டங்களிலிருந்து (Debt Funds - கடன் பத்திர முதலீடுகள்), அது அதிகமுள்ள திட்டங்கள் (Equity Funds - பங்கு முதலீடுகள்) வரை தேர்வுகள் உள்ளன.

3 . தொழில் முனைவோர் (Entrepreneur)
இவர்கள் ஒரு வகையில் மாத வருமானக்காரர்கள் போலத்தான். இவர்களுடைய நேரடியான அறிவார்ந்த உழைப்பினாலேயே இவர்கள் தங்கள் தொழிலையும் பணத்தையும் வளர்க்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள். அதே நேரம் மற்ற இருவரையும் விட அதிக நிதி அபாய (Financial Risk) நிலையில் இருப்பவர்கள். எப்பொழுதும் தொழில் முதலீடு தேவைப்படும் நிலையில் இருப்பதனால் எதிர்காலத்துக்காக முதலீடு செய்வதை தள்ளிப்போடக் கூடாது. ஏனென்றால் தங்களுடைய எதிர்காலத்துக்கு தேவையானவற்றைச் செய்யும் பொறுப்பு முழுதும் அவர்களையே சார்ந்தது. அதே நேரம் அதிக லாப நோக்கில், குறுகிய காலத்தில் சம்பாதிக்க இவர்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முனையக் கூடாது. அதில் லாப நட்டத்துக்கு உத்தரவாதம் கிடையாது. நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே அவர்கள் அதில் ஈடுபடவேண்டும். அதுவே அவர்கள் தொழிலுக்கும் நல்லது. தங்களது சராசரி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் சீரான முதலீடு செய்வது சிறந்தது. பங்குச் சந்தையிலோ பண்டகச் சந்தையிலோ நேரடியான கவனத்தை செலுத்துவது குறைவாக இருக்க வேண்டும். அதாவது பண ரீதியாகவும் கால ரீதியாகவும்  அவர்களது தொழிலைப் பாதிக்காத வகையில்.

இப்போது என்ன செய்யலாம்?
தங்கத்தைப் பற்றி விரிவாக, என்ன செய்யலாம் என்று ஏற்கனவே எழுதி விட்டோம். அதை இங்கே பார்க்கலாம்.
தங்கம் இப்போது வாங்கலாமா?
ங்குச் சந்தையைப் பொறுத்தவரை இப்போதுள்ள பிரச்சினை உலகளாவியது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மிகவும் பிரச்சினையில் இருக்கின்றன. அமெரிக்காவின் (US) கடன் திரும்ப செலுத்தும் தகுதியை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (S&P) AAA (அதி உச்ச நம்பகத்தன்மை) விலிருந்து AA +  என்று குறைத்தது தெரிந்திருக்கும்.
"தன்னுடைய எந்தக் கடனையும் அமெரிக்கவால் அடைக்க முடியும். ஏனென்றால் அதைச் செய்யத் தேவையான பணத்தை எப்போதும் எங்களால் அச்சடிக்க முடியும். அதனால் தவறுவதற்கான வாய்ப்பு பூஜ்ய அளவே. S & P விஷயம் செய்ததாக நான் நினைப்பது என்னவென்றால், ஏதோவொரு அடிப்படையான தவறு இருக்கிறதென்ற தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அமெரிக்காவின் ஆன்மாவான சுயமரியாதையில் அடித்ததே." 
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் சொன்ன வாக்கியங்கள் மூலமே பிரச்சினை அடிப்படையானது என்று தெரியும். அங்கே வேலையின்மை பெரும் பிரச்சினை. 
ஐரோப்பாவில் கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் வரிசையாக மூழ்கிக் (Insolvency) கொண்டிருக்கின்றன. பலரும் ஐரோப்பிய யூனியனின் சரிவு உலகப் பொருளாதாரத்தை பலமாகப் பாதிக்கும் என்றே கூறுகிறார்கள். இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக விரிவாகப் பேச வேண்டியவை.
இதில் இந்தியாவின் சந்தை என்னவாகும்? ஏற்கனவே உயரத்திலிருக்கும் பணவீக்கம், அதனால் அதிகரிக்கப்படும் வங்கி கடன் வட்டி விகிதம் போன்றவை சேமிப்பையும் முதலீட்டையும் பாதிக்கும். நுகர்வைக் குறைக்கும். அதனால் தொழில் வேகம் குறையும். அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் விலை உயர்வால் வாகனங்களின் விற்பனை குறைந்து விட்டது. வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு வீடு வாங்குவோரைப் பாதிக்கிறது. அதற்கும் மேலாக வளர்ச்சி வேகம் குறைகிறது என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஆக எல்லாம் குறைந்து, பண்டங்களின் விலை வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் குறையும் போது வட்டி விகிதம் குறைக்கப்படும். இது ஒரு சக்கரம். இறுதியாக, அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் ஒரு வீழ்ச்சி (Recession) க்குள் செல்லாமல் இருந்தால் (40 ௦% நிகழும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்), ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் (முக்கியமாக கிரீஸ் மற்றும் இத்தாலி முழுகுவதைத் தடுப்பது) தனது பிரச்சினையிலிருந்து நல்லபடியாக மீண்டால், ஆசியச் சந்தை மேலே வரும் வாய்ப்புள்ளது. 

க, இப்போதைக்குச் சந்தையில் புதிய முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கலாம்.
ஏற்கனவே உள்ள முதலீடுகளைச் சரி பார்க்கலாம். சற்று பாதுகாப்பான முறையில் அவற்றைத் திருத்தி அமைக்கலாம்.
மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து பொருளாதாரம் மீளும் போது, தொகுப்பை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்.    

Friday, September 23, 2011

நிதித் திட்டமிடுதல் ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?

மேற்கண்ட தலைப்பில் வந்த ஒரு எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) கட்டுரை வாடிக்கையாளர்களுடனான எங்களது அனுபவங்களைப் பெரிதும் ஒத்திருந்தது. அதில் குறிப்பிட்ட காரணங்கள் பற்றிய எங்களது கருத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு.

  • பொதுவாக முதல் சந்திப்பில் நிதித் திட்டமிடல் பற்றிப் பேசும் பொது மிக ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் தேவை என்பதிலும், சீக்கிரம் திட்டமிட ஆரம்பிப்பதில் உள்ள நன்மையையும் நன்கு உணர்கிறார்கள். அடுத்த கட்ட நகர்வு தான் பலருக்கும் பிரச்சினை. அதாவது செயல் படுத்துவதில் தான் சுணக்கமே. இது பெரும்பாலும் திட்டமிடுபவர் (Financial Planner) தேவைப்படும் தகவல்களைக் கேட்கும் போதே ஆரம்பிக்கிறது. பல இளைஞர்களுக்கு (25 - 35 வயதுக்காரர்கள்) பல தகவல்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பலருக்கு தங்கள் வங்கி கிளை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. மாத வருமானக்காரர்களுக்கே இது பொருந்தும். இவர்களுக்கு தங்களுடைய நிதித் தகவல்களை எடுத்துக் கொடுப்பது பெரிய காரியமாக இருக்கிறது. இந்த மனப்பாங்குக்குக் காரணமாக நான் நினைப்பது, அவர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான தயக்கமே. தங்களுடைய உண்மையான நிதி நிலையை (அவர்கள் நல்ல நிதி நிலையில் இருந்தாலுமே) தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு பதற்றம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதைத் தள்ளிப் போடவே தகவல்களை அளிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். தாமதத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலும் பணிச்சுமையே. முதலீடுகள், காப்பீடுகள், வருமானம் பற்றிய தகவல், கடன் விவரங்கள் போன்றவற்றை தோண்டியெடுப்பது தேர்வெழுதும் உணர்வை கொடுக்கிறது போல. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வசதியும் நெருக்கடியற்ற நிலையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 
  • இளம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வை இப்போதே அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது. அதுவும் கடன் வாங்கி. சொத்துக்களை கட்டமைக்க வாங்குவதைக் காட்டிலும் பொருட்களை நுகர்வதற்கே (ஹோம் தியேட்டர், செல் போன்கள், கார்) அதிகம் கடன் வாங்கப் படுகிறது. நிதித் திட்டமிடல் தங்களுடைய வாழ்க்கைமுறை நுகர்வை (Lifestyle consumption) பாதிக்ககூடும் என்பதால் அதைத் தள்ளிப்போடவே விரும்புவார்கள். 'எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருக்கிறது', என்ற மனப்பாங்கே இதற்குக் காரணம். 
  • நிறைய வாசிப்பதினால் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு. நிறையப் படிப்பது தவறில்லை. உண்மையில் அவ்வாசிப்பு விழிப்புணர்வை கூட்டி நிபுணர்களின் வழிகாட்டுதல் பற்றிய மதிப்பீட்டை  ஏற்படுத்த வேண்டும். மாறாக, தாங்களாகவே இதைச் செய்து கொள்ள முடியும் என்ற அபிரிமிதமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையில் அப்படிச் சுயமாகத் திட்டமிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.    ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. ஆழ்ந்த கல்விப் பின்புலமும் நீண்ட அனுபவமும் உடைய நிபுணர்களின் வழிகாட்டுதல் எப்போதும் பலமே. இதைச் சட்டை செய்யாதவர்கள் தங்களின் வாசிப்பின் வழியாக, தங்களைக் குறி வைத்து சந்தைப்படுத்தப் படும் பல நிதிப் பண்டங்களை (காப்பீடுகள், பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கி பின் குழப்பத்துக்கு ஆளாவதைக் காணலாம். எனக்குத் தெரிந்த, நன்கு வருமானம் ஈட்டுகிற, நிறைய முதலீடுகள் செய்துள்ள, ஒரு இளம் தொழிலதிபர் நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார். இவர் நிதி சார்ந்த பல பத்திரிக்கைகளை வாசிப்பவர்.
  • நிதி சார் குறிக்கோள் இல்லாமலிருப்பது. பெரும்பாலான இளம் பெற்றோர் தங்களது குழந்தைகள் மீதான கனவோடு அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு பத்து வருடங்கள் கழித்து அவர்களின் உயர் படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்றால் தெரியாது. தோராயமாக் கூட கணக்கிட மாட்டார்கள். அதைப் போலவே தங்களின் ஓய்வு கால நிதி பற்றியும் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்.இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் ஓய்வு பெரும் நிலையில் இருப்பவர்களும் கூட கவனம் இல்லாமல் இருப்பது இங்கே சாதாரணம். இது ஒரு நிதி சார்ந்த இலக்கு என்ற தெளிவு இல்லாததுதான் காரணம்.
  • கட்டணம் இன்னொரு காரணம். நிதித் திட்டமிடுதல் போன்ற விசயங்களுக்கு பெரிய முன் வரலாறு இங்கே இல்லை. ஆலோசனைக்கு கட்டணம் செலுத்துவது மருத்துவம் தவிர பிற துறைகளில் இன்னும் பிரபலமாகவில்லை. இதற்குப் போயா இவ்வளவு? அப்படியென்ன வேலையிருக்கிறது இதில்? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உண்மையில் ஒரு நிதித் திட்டத்தைத் தயாரிப்பதில் திட்டமிடுபவர் தனது பணி நேரத்தில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார். நிதிக் கருவிகளைக் (Financial  Tools) கொண்டு, தனது கல்வி, அனுபவம் மற்றும் பொருளறிவு (Product Knowledge) ஆகியவற்றோடு ஒரு தனி நபரின் பிரத்யேகமான சூழலையும் கணக்கில் கொண்டே திட்டத்தை வரைகிறார். இதை ஒரு சூத்திரத்தில் அடக்க முடியாது. ஒவ்வொரு திட்டமும் தனித்தன்மை வாய்ந்தது. 
னால் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. கொஞ்சகொஞ்சமாக படித்தவர்களிடையே நிதித் திட்டமிடுதல் பற்றிய சிந்தனை கூடிவருகிறது. நிதிவிவகாரம் பற்றிய பத்திரிக்கைகளும் பெருகி வருகின்றன. தொழில் விவகாரங்களை அலசும் நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தனி நபர் நிதி (Personal Finance) பற்றிய பதிவுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதோடு தனி நபர் நிதி பற்றி மட்டுமே பேசும் இதழ்கள் வெளி வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மாறிவரும் சூழல் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. 

    Wednesday, August 24, 2011

    தங்கம் இப்போது வாங்கலாமா?

    2005 வாக்கில் நான் ஒரு பண்டக முன் ஒப்பந்தச் சந்தை (Commodities Futures Market) தரகு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பண்டகச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைக் கணிப்பதன் மூலம் வாடிக்கையாளருக்கு வர்த்தக லாபத்தை ஏற்படுத்த ஆலோசனை கூறுவதே ஒரு பகுத்தாய்வாளரின் (Analyst) பணி. ஆய்வு இரு வகைப்படும். முதலாவது ஒரு பண்டகத்தின் அடிப்படைக் காரணிகளை (உற்பத்தி மற்றும் நுகர்வுத் தேவை சம்பந்தமானது) ஆராய்வது. எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதோடு நுகர்வு எவ்வளவு கூடியிருக்கிறது என்பதைக் கணக்கிட்டு பார்ப்பதன் மூலம் அடையும் முடிவு. தேவை குறைந்து உற்பத்தி சீராக இருந்தால் விலை விழும். உற்பத்தி சீராக இருந்தும் தேவை கூடினால் விலை ஏறும். தங்கத்தை இதில் வகைப் படுத்த முடியாது. தங்கத்தின் நுகர்வு பெரும்பாலும் முதலீடு தொடர்புடையதாக இருப்பதும், பணத்துக்கு மாற்றாக இருப்பதும், அதை ஒரு தனித்துவமிக்க ஒன்றாக ஆக்குகிறது. இந்தியாவிலோ தங்கம் உணர்வோடு பிணைந்தது. இரண்டாவது, தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis). நிரல் படம் (Charts) மற்றும் முந்தைய தரவுகளைக் கொண்டு மென்பொருள் உதவியுடன் எதிர்கால விலைப் போக்கைக் (Price Trend) கணிப்பது. 

    அப்படி ஆராய்ந்து 1 அவுன்ஸ் (தோராயமாக 31 கிராம்) தங்கம், 500 டாலரைத் தாண்டும் என்று பலர் முன்கூறுதல் (Forecast) செய்தார்கள். ஜிம் ரோஜர்ஸ் (முதலீட்டாளர் மற்றும் Hot Commodities, Adventure Capitalist போன்ற புத்தகங்களை எழுதியவர்) போன்றவர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட பண்டகச் சந்தை ஏறுமுகத்தை கணித்து முன்கூறியிருந்தார்கள். அதேபோல பல பண்டங்களும் (தாமிரம், கச்சா எண்ணெய் மற்றும் கோதுமை, சோளம் போன்ற தானியங்கள்) விலை ஏறிக்கொண்டிருந்தன. முதன் முதலாக புதிய விலை உயர்வுகளைப் பார்த்தோம். நாள்தோறும். சுத்தமான காளையின் ஆதிக்கம். 

    2005 ல் தங்கம் ஒரு அவுன்ஸ் 500 டாலரைத் தாண்டியது. 2007 ல் 800 டாலரைத் தாண்டியது. 2008 ல் 1000 டாலர். 28 வருடங்களுக்கு முந்தைய உச்ச விலையான 850௦ டாலரை அப்போதுதான் தாண்டியது. 

    Year
    Yearly
    High 
    Yearly
    Low  

     Year
    Yearly
    High 
    Yearly
    Low 
    1972
    $70.00
    $44.00
    1990
    $423.75
    $345.85
    1973
    $126.00
    $64.00
    1991
    $403.00
    $344.30
    1974
    $195.00
    $117.00
    1992
    $359.60
    $330.20
    1975
    $185.00
    $135.00
    1993
    $406.70
    $326.10
    1976
    $142.00
    $102.00
    1994
    $397.50
    $369.65
    1977
    $168.00
    $127.00
    1995
    $396.95
    $372.40
    1978
    $243.65
    $165.70
    1996
    $416.25
    $367.40
    1979
    $524.00
    $216.55
    1997
    $367.80
    $283.00
    1980
    $850.00
    $474.00
    1998
    $314.60
    $273.40
    1981
    $599.25
    $391.25
    1999
    $323.50
    $252.80
    1982
    $488.50
    $296.75
    2000
    $325.50
    $264.10
    1983
    $511.50
    $374.25
    2001
    $291.45
    $256.65
    1984
    $406.85
    $303.25
    2002
    $342.75
    $277.75
    1985
    $340.90
    $284.25
    2003
    $417.25
    $319.90
    1986
    $442.75
    $326.00
    2004
    $454.20
    $375.00
    1987
    $502.75
    $390.00
    2005
    $536.50
    $411.10
    1988
    $485.30
    $389.05
    2006
    $725.00
    $524.75
    1989
    $417.15
    $358.50
    2007
    $841.10
    $608.40
    2008
    $1,011.25
    $712.50


    2009
    $1,212.50
    $810.00
    2010
    $1,421.00
    $1,058.00




    1978 வரை படிப்படியாக ஏறிக் கொண்டிருந்த தங்க விலை முதன்முறையாக 1979 ல் 500 டாலரைத் தாண்டியது. 1980 ல் 850 டாலரை தாண்டிய தங்கம் 2008 ல் தான் அதை மீண்டும் எட்டிப் பிடிக்கிறது. இடைப்பட்ட 27 வருடங்களின் உச்சபட்ச விலை சராசரி 442.12 டாலர்தான்.
    தங்கம் விலையேற தற்போதைய முக்கியக் காரணம் உலகப் பொருளாதாரம் பற்றிய பொதுவான அச்ச உணர்வே. அமெரிக்காவின் பொருளாதார சரிவு (Recession) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் (கிரீஸ், இத்தாலி போன்ற) பொருளாதாரப் பிரச்சினைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பி உள்ளன. இது போன்ற நிலையற்ற தன்மை நிலவும்போது பெரும் பணம் தொழில் முதலீடுகளில் (பங்குச் சந்தை) இருந்து எடுக்கப்பட்டு தங்கத்தில் போடப்படும். தங்கமே அவர்கள் முன் உள்ள ஒரே மாற்று. எச்சரிக்கையுணர்வே இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஆகும். சரியான திசை புலப்படும் வரை இது தொடரும். 

    இப்போது முதலீடு செய்யலாமா?
    இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவொரு முதலீட்டாளரும் தங்கத்தை பொதுவாக நகைகளாக வைத்திருப்பார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு பழக்கம் இல்லை. அதனால் அவர்களது மொத்த சொத்தில் தங்கத்தின் பங்கு கணிசமாக இருக்கும். சொத்தோ வேறு முதலீடுகளோ இல்லாத குடும்பத்தில் கூட நகைகளாக சிறிது தங்கம் இருக்கும். அதனால் மொத்தமாக முதலீடு (Bulk Investment) செய்பவர்களுக்கு இது சரியான நேரமல்ல. எந்த ஒரு பண்டமும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்காது. மொத்த முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மட்டும் சீரான இடைவெளியில் (மாதா மாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போல) தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். அதையும் நகைகளாக வாங்காமல் தங்க சந்தைப் பரிவர்த்தனை நிதியில் (Gold Exchange Traded Fund) முதலீடு செய்வது நல்லது.ஏனென்றால் அடுத்த பத்திருபது வருடங்களுக்கு தங்க முதலீடு என்ன விளைச்சலைக் கொடுக்கும் என்பதே கேள்வி. முந்தைய வரலாறு கண்முன்னே உள்ளது.